'பொதுச்செயலாளர்' எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைக்குமா....? நாளை தேர்தல் ஆணையம் ஆலோசனை...!


பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கீகாரம் கிடைக்குமா....? நாளை தேர்தல் ஆணையம் ஆலோசனை...!
x

இந்த அவகாசம் வருகிற 22 ந்தேதியுடன் முடிவடைய உள்ளது இதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் நாளை ஆலோசனை நடத்த உள்ளது.

புதுடெல்லி

அ.தி.மு.க.வில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க உத்தரவிட வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிசாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட்டு, 10 நாட்களில் முடிவெடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த அவகாசம் வருகிற 22 ந்தேதியுடன் முடிவடைய உள்ளது இதை தொடர்ந்து தேர்தல் ஆணையம் நாளை ஆலோசனை நடத்த உள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஆனூப் சந்திர பாண்டே, ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர்.

அ.தி.மு.க.வில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடந்தது. இந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு தீர்மானங்களுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இது நிலுவையில் இருக்கும் நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பொதுக்குழு தீர்மானத்தை எதிர்க்கும் வழக்கு அவசரமாக கடந்த 22ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார். ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது ஓ பன்னீர் செல்வம் தரப்பில் பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பில் விதிகள் மீறப்பட்டுள்ளன. இதனால் 2022 ஜூலை 11 பொதுக்குழு தீர்மானத்தை ஏற்க கூடாது. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த கூடாது என வாதம் முன்வைக்கப்பட்டது.

மாறாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அ.தி.மு.க.வில் பொதுக்குழுவுக்கு தான் உச்சப்பட்ச அதிகாரம் உள்ளது. விதிகளின் படியே செயல்பாடு உள்ளது. இதனால் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட சென்னை ஐகோர்ட்டு பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி கொள்ளலாம். ஆனால் முடிவுகளை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடந்து முடிந்தது.

எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அப்போது ஓ பன்னீர் செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஜூலை 11 பொதுக்குழு தீர்மானம் செல்லும், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என சென்னை ஐகோர்ட்டு கூறியது.

அதன்படி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமா அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்று கொண்டார். இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டில் தனி நீதிபதி தள்ளுபடி செய்த மனுவை எதிர்த்து இருவர் அமர்வில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.

இதன் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது பற்றிய விபரங்கள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இமெயில் மற்றும் தபால் மூலம் ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்பதை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அ.தி.மு.க. தெரிவித்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் ஆணையர், தலைமை தேர்தல் அதிகாரி என அனைவருக்கும் ஆவணங்கள் மூலம் தெரியப்படுத்தியது.


Next Story