இளம்பெண்ணை மிரட்டி 6 ஆண்டுகளாக பலாத்காரம்: வாலிபர் கைது


இளம்பெண்ணை மிரட்டி 6 ஆண்டுகளாக பலாத்காரம்: வாலிபர் கைது
x

கோப்புப்படம்

தினத்தந்தி 6 Feb 2024 12:03 AM GMT (Updated: 6 Feb 2024 5:38 AM GMT)

நெருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிடுவதாக இளம்பெண்ணை மிரட்டியை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நெலமங்களா,

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகே நெலமங்களா நகரின் பீதரை சேர்ந்தவர் சிவக்குமார் ஒசள்ளி (வயது 25). இவர் பெங்களூரு சிக்பேட்டையில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு உடுப்பியில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது, சிவக்குமாருக்கும் பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களாவை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் செல்போன் எண்களை பரிமாறி கொண்டு பழகி வந்தனர்.

இந்த நிலையில் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனை அறிந்த சிவக்குமார், நெலமங்களாவுக்கு சென்றார். இதையடுத்து அவர்கள் இருவரும் அங்கு நெருக்கமாக இருந்ததாக தெரிகிறது. இதனை இளம்பெண்ணுக்கு தெரியாமல் சிவக்குமார் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில் சிவக்குமார், இளம்பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோவை காண்பித்து அவரை அடிக்கடி பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது. அத்துடன், தன்னுடன் வரவில்லை என்றால் வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாகவும் மிரட்டி வந்துள்ளார். இதனால் பயந்து போன இளம்பெண், இதுபற்றி வெளியே யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார்.

இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு கடந்த 6 ஆண்டுகளாக இளம்பெண்ணை சிவக்குமார் மிரட்டி பலாத்காரம் செய்து வந்துள்ளார். அத்துடன் இளம்பெண்ணிடம் இருந்து ரூ.85 ஆயிரம் வரை பறித்துள்ளார்.

சிவக்குமாரின் தொந்தரவு தொடர்ந்து அதிகரித்து போனதால், விரக்தி அடைந்த இளம்பெண், இதுபற்றி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இளம்பெண்ணின் பெற்றோர் இதுபற்றி நெலமங்களா டவுன் போலீசில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story