மானை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது
![மானை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது மானை வேட்டையாட முயன்ற 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/05/31/715432-arrest-01.webp)
கல்லாவி அருகே மானை வேட்டையாட சென்ற 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 நாட்டுத்துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடி மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.
ஊத்தங்கரை:
வனத்துறையினர் ரோந்து
கிருஷ்ணகிரி வனச்சரகம் கல்லாவி பிரிவு, நொச்சிப்பட்டி வனப்பகுதியில் வனவர் துரைக்கண்ணு, வன காப்பாளர்கள் அங்குரதன், முருகன், வன காவலர் பூபதி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கருவானூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். வனத்துறையினர் அவர்களை நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் அருகே உள்ள பள்ளப்பட்டியை சேர்ந்த இளங்கோ (வயது 32), கல்லாவி அருகே உள்ள கழுதப்பட்டியை சேர்ந்த தங்கராஜ் (28) ஆகியோர் என தெரிய வந்தது. அவர்கள் நாட்டுத்துப்பாக்கி மூலம் வனப்பகுதியில் மானை வேட்டையாட சென்றது தெரிந்தது.
2 பேர் கைது
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 நாட்டுத்துப்பாக்கிகள், வெடி மருந்து, தோட்டாக்கள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்கள் மீது வன உயிரின குற்றப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.