ஆடு திருடிய 2 பேர் கைது
![ஆடு திருடிய 2 பேர் கைது ஆடு திருடிய 2 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/08/09/815619-1.gif)
ஆடு திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வெள்ளியணை லட்சுமி நகரை சேர்ந்தவர் பிச்சைமுத்து (வயது54). இவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருவதுடன், ஆடுகளும் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் தனது வீட்டின் அருகே பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆடுகளிலிருந்து ஒரு ஆட்டை மர்ம நபர்கள் 2 பேர் பைக்கில் வைத்து திருடி செல்ல முயல்வதை பிச்சைமுத்து பார்த்தார். இதனையடுத்து அங்கு இருந்தவர்களின் உதவியுடன் 2 பேரையும் மடக்கிப்பிடித்து வெள்ளியணை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வெள்ளியணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யப்பிரியா மற்றும் போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் மல்லபுரம் தாசநாயக்கனூர் அண்ணாவி(47), குளித்தலை வதியம் கீழகுறப்பாளையம் ஸ்ரீதர்(49) என்பதும் ஆட்டை திருடி செல்வதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.