கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் 5 நாள் தொடர் வேலை நிறுத்தம் வாபஸ்


கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் 5 நாள் தொடர் வேலை நிறுத்தம் வாபஸ்
x
தினத்தந்தி 17 Feb 2018 6:47 AM GMT (Updated: 17 Feb 2018 6:47 AM GMT)

கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் 5 நாள் தொடர் வேலை நிறுத்தம் இன்று வாபஸ் பெறப்பட்டு உள்ளது. #Lorrystrike

சென்னை,

தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமாக மொத்தம் 7,500 கியாஸ் டேங்கர் லாரிகள் உள்ளன. இவற்றில் 4,500 டேங்கர் லாரிகள் இந்தியா முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள 3 ஆயிரம் டேங்கர் லாரிகள் புதிய டெண்டரை எதிர்நோக்கி உள்ளன.

இந்தநிலையில் புதிய வாடகை டெண்டரை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி அறிவித்தது. மேலும் மண்டல வாரியாக நடத்தப்பட்ட டெண்டர் நடைமுறையில் மாற்றம் செய்து, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி டெண்டர் என்ற புதிய முறையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

இந்த புதிய டெண்டர் நடைமுறை மூலம் ஒரு வாகனம் எந்த மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளதோ, அந்த மாநிலத்தில் நடைபெறும் டெண்டரில் தான் பங்கேற்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.

எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மாநில அளவிலான வாடகை டெண்டர் நடைமுறையை திரும்பப்பெற வலியுறுத்தியும், மண்டல அளவிலான டெண்டர் நடைமுறையை பின்பற்ற கோரியும், கடந்த திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என்று நாமக்கலில் நடந்த தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 12ந்தேதியில் இருந்து திட்டமிட்டபடி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டம் கடந்த 5 நாட்களாக தொடர்ந்தது.  இதனால் தினமும் லாரி உரிமையாளர்களுக்கு ரூ.2 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது.

இந்த போராட்டத்தினால் தினமும் 13 ஆயிரம் டன் எரிவாயு எடுத்து செல்லும் பணிகள் பாதிக்கப்பட்டு இருந்தன.  14 லட்சம் சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் பணிகளும் பாதிக்கப்பட்டன.

இந்த நிலையில், நாமக்கலில் தென்மண்டல பல்க் எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களின் கூட்டம் இன்று நடந்தது.  இதில் வேலைநிறுத்த போராட்டத்தினை திரும்ப பெறுவது என முடிவு செய்யப்பட்டது.

டெண்டர் விவகாரத்தில் எண்ணெய் நிறுவனங்கள் அளித்த உறுதியின்பேரில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது.

Next Story