எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம் காவிரி பிரச்சினை குறித்து மோடியுடன் பேச திட்டம்


எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லி பயணம் காவிரி பிரச்சினை குறித்து மோடியுடன் பேச திட்டம்
x
தினத்தந்தி 2 May 2018 12:15 AM GMT (Updated: 2 May 2018 1:40 AM GMT)

மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டம் தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இன்று டெல்லி செல்கிறார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

புதுடெல்லி,

மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு விழா அடுத்த ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி முதல் 2020-ம் ஆண்டு அக்டோபர் 2-ந் தேதி வரை ஓர் ஆண்டு காலம் கொண்டாடப்பட உள்ளது.

இந்த விழாவை சிறப்பாக கொண்டாடவும், பல்வேறு திட்டங்களை நிறைவேற்றவும் மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார்.

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளை கொண்டாடுவது தொடர்பாகவும், திட்டங்களை வகுப்பது தொடர்பாகவும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய அளவிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு பரிந்துரைக்கும் திட்டங்களை மத்திய அரசு பரிசீலித்து நிறைவேற்றும்.

இந்த குழுவில் முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய், தேவேகவுடா, மன்மோகன் சிங், முன்னாள் துணை பிரதமர் அத்வானி, மத்திய மந்திரிகள், நாடாளுமன்ற சபாநாயகர், மாநில முதல்-மந்திரிகள் என 114 பேர் இடம்பெற்று உள்ளனர்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகாஜூன கார்கே (காங்கிரஸ்), அமித்ஷா (பா.ஜனதா), முலாயம் சிங் (சமாஜ்வாடி), சரத்பவார் (தேசியவாத காங்கிரஸ்), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு), சுதாகர் ரெட்டி (இந்திய கம்யூனிஸ்டு), வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ரவிசங்கர், சத்குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோரும் இடம்பெற்று இருக்கிறார்கள்.

இந்த குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று (புதன்கிழமை) மாலை நடைபெறுகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். இதற்காக அவர் இன்று காலை 6 மணிக்கு விமானம் மூலம் டெல்லி செல்கிறார். காலை 8.55 மணிக்கு விமானம் டெல்லியை சென்றடைகிறது. விமானநிலையத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி நேராக தமிழ்நாடு இல்லத்துக்கு செல்கிறார். அங்கு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினை தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் ஆஜராகி வாதாடும் வக்கீல்கள் குழுவினரை சந்தித்து பேசுகிறார்.

பின்னர் மாலை 5 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெறும் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் விழா தொடர்பான கூட்டத்தில் பங்கேற்கிறார்.

அதனைத்தொடர்ந்து இரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறுநாள் (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

டெல்லியில் இருக்கும் போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்சினை தொடர்பாகவும், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்தும் பிரதமர் மற்றும் மத்திய மந்திரிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது.


Next Story