நீட் தேர்வு எழுத கேரளா செல்லும் மாணவர்களுக்கு உதவிகள் செய்ய தயார்: டிடிவி தினகரன்


நீட் தேர்வு எழுத கேரளா செல்லும் மாணவர்களுக்கு உதவிகள் செய்ய தயார்: டிடிவி தினகரன்
x
தினத்தந்தி 4 May 2018 8:08 AM GMT (Updated: 4 May 2018 8:08 AM GMT)

நீட் தேர்வு எழுத கேரளா செல்லும் மாணவர்களுக்கு உதவிகள் செய்ய தயார் என்று ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். #TTVdhinakaran #NEET

சென்னை,

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (‘நீட்’) சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்துகிறது. அந்தவகையில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இந்த தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்த தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இது தமிழக மாணவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியல் கட்சி தலைவர்களும் தங்களுடைய கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளனர். தேர்வு மையங்கள் ஒதுக்கீடு கணினி மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதால், இதில் மாற்றம் செய்ய முடியாது என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு சி.பி.எஸ்.இ. ஒதுக்கீடு செய்த தேர்வு மையங்களில் தான் தமிழக மாணவர்கள் தேர்வு எழுதவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில்,வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு உதவிகள் செய்ய தயார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளரும் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏவுமான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேரள மாநிலத்திற்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தேவைப்படுமெனின் தங்குமிட வசதியும், தேர்வு மையத்தை சுலபமாக அடையாளம் காண வழிகாட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 



Next Story