மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் படிப்புக்கு தேவையான உதவிகளை தமிழக பாஜக செய்யும் தமிழிசை சவுந்தரராஜன்


மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் படிப்புக்கு தேவையான உதவிகளை தமிழக பாஜக செய்யும்  தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 6 May 2018 9:29 AM GMT (Updated: 6 May 2018 9:29 AM GMT)

எதிர்காலத்தில் மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் படிப்புக்கு தேவையான உதவிகளை தமிழக பாஜக செய்யும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். #NEET #TamilisaiSoundararajan

சென்னை,

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. தமிழக மாணவர்கள் பலருக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், திருத்துறைப்பூண்டியைச்சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 

இதன்படி, கிருஷ்ணசாமி தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துடன் எர்ணாகுளம் சென்றார். இன்று காலை 10 மணிக்கு நீட் தேர்வு தொடங்கியதால், கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுத மையத்திற்கு சென்றார். மகனை தேர்வு மையத்திற்குள் அனுப்பி விட்டு விடுதியில் காத்திருந்தபோது திருத்துறைப்பூண்டி விளக்குடியைச்சேர்ந்த  கிருஷ்ணசாமி திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தந்தை இறந்தது தெரியாமல் மகன் கஸ்தூரி மகாலிங்கம் தேர்வு எழுதினார். 

உயிரிழந்த கிருஷ்ணசாமியின் உடல் எர்ணாகுளத்தில் உள்ள சிட்டி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாணவரின் தந்தை கிருஷ்ணசாமியின் உடலை தமிழகம் கொண்டு வர  தேவையான ஏற்பாடுகளை செய்ய தலைமைச்செயலாளருக்கு முதல் அமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை வழங்கவும், கிருஷ்ணசாமியின் குடும்பத்திற்கு  ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கவும் முதல் அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  

கிருஷ்ணசாமி இறந்தது தெரியாமல் அப்பா எங்கே என நீட் எழுதிவிட்டு வெளியே வந்த  கஸ்தூரி மகாலிங்கம் அருகில் இருந்தவர்களிடம் கேட்ட சம்பவம் பெரும் சொகத்தை ஏற்படுத்தியது. 

இந்தநிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டர்பக்கத்தில் கூறியிருப்பதாவது:

நீட் தேர்வு எழுத மகனை கேரளா அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி எர்ணாகுளத்தில் மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

தந்தை இறந்தது தெரியாமல் மகன் கஸ்தூரி மகாலிங்கம் நீட் தேர்வை எழுதினார் என்ற செய்தி மேலும் துயரத்தை தருகிறது. மாணவர் கஸ்தூரி மகாலிங்கம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும்  தமிழக பாஜக சார்பில் எங்களது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு வருங்காலத்தில் மாணவன் கஸ்தூரி மகாலிங்கம் படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக பாஜக உதவும்.

Next Story