ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தூத்துக்குடிக்கு 3-பேர் குழு இன்று மாலை வருகிறது : மாவட்ட ஆட்சியர்


ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தூத்துக்குடிக்கு 3-பேர் குழு இன்று மாலை வருகிறது : மாவட்ட ஆட்சியர்
x
தினத்தந்தி 22 Sep 2018 5:53 AM GMT (Updated: 22 Sep 2018 5:53 AM GMT)

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய தூத்துக்குடிக்கு 3-பேர் குழு இன்று மாலை வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மே மாதம் நடந்த போராட்டத்தின்போது தடியடி, துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது.இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது. இதை விசாரித்த தீர்ப்பாயம் நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை கடந்த 30-ந் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த ஆய்வுக்குழு 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகின. இதன்படி, தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த தருண் அகர்வால் தலைமையிலான குழு நாளை காலை 8 மணிக்கு ஆய்வு செய்ய உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மேலும் கூறும் போது, “மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் காவல்துறை மாசுக்கட்டுப்பாடுத்துறையினர் ஆய்வின்  போது உடன் இருப்பர், ஸ்டெர்லைட் ஆலையில் மட்டுமே குழு ஆய்வு செய்கிறது. தேவைப்பட்டால் வெளியேயும் ஆய்வு நடத்தலாம்.  உப்பாற்று ஓடை அருகில் கொட்டப்பட்டுள்ள தாமிர தாது கழிவுகளை குழு இன்று பார்வையிடுகிறது. 

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு இன்று மாலை தூத்துக்குடி வருகை தருகிறது. ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தூத்துக்குடியில் நாளை காலை 11.30- மணிக்கு இந்தக்குழு மக்களிடம் கருத்து கேட்கிறது.  அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடக்கும் கூட்டத்தில் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம். 2 மணி நேரம் கூட்டம் நடக்கும் ” இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story