டேராடூன் எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் சிக்கி வாலிபர் பலி 7 கி.மீ. தூரம் உடல் இழுத்துச்செல்லப்பட்டது


டேராடூன் எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் சிக்கி வாலிபர் பலி 7 கி.மீ. தூரம் உடல் இழுத்துச்செல்லப்பட்டது
x
தினத்தந்தி 22 Nov 2018 11:27 PM GMT (Updated: 22 Nov 2018 11:27 PM GMT)

டேராடூன் எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினில் சிக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் 7 கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டது.

அரக்கோணம்,

மதுரையில் இருந்து காட்பாடி, அரக்கோணம், சென்னை வழியாக டேராடூன் செல்லும் டேராடூன் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகே நேற்று காலை ரெயில் கடந்து சென்றபோது ரெயில் என்ஜினில் சிக்கி ஒருவர் இறந்துகிடப்பது தெரியவந்தது.

இறந்தவரின் உடல் ரெயில் என்ஜினில் சிக்கியிருந்தது. என்ஜின் டிரைவருக்கு இது தெரியாததால் ரெயில் சோளிங்கர் தாண்டி சென்றது. அப்போது ரெயில் நிலையத்தில் இருந்த ஊழியர்கள் ரெயில் என்ஜினில் ஒருவரின் உடல் சிக்கி உள்ளது என்று என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே டிரைவர் ரெயிலை சித்தேரி ரெயில் நிலையம் அருகே நிறுத்திவிட்டு என்ஜின் பகுதிக்கு சென்று பார்த்தார். அப்போது ஒருவர் என்ஜினுக்கு முன்பாக சிக்கி இறந்து உடல் தொங்கிக்கொண்டு இருந்தது. சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு உடலை என்ஜின் இழுத்துச் சென்றது தெரியவந்தது.

அரக்கோணம் ரெயில்வே போலீசார் இறந்துகிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்தவருக்கு 35 வயது இருக்கும். மஞ்சள் நிற முழுக்கை சட்டையும், கருப்பு நிற பேண்ட்டும் அணிந்து இருந்தார். ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் டேராடூன் எக்ஸ்பிரஸ் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சித்தேரி அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டு, 50 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.

Next Story