திருவண்ணாமலையில் பக்தர்களின் அரோ ஹரா கோஷத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது


திருவண்ணாமலையில் பக்தர்களின் அரோ ஹரா கோஷத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது
x
தினத்தந்தி 23 Nov 2018 12:37 PM GMT (Updated: 23 Nov 2018 12:41 PM GMT)

திருவண்ணாமலையில் பக்தர்களின் மெய்சிலிர்க்க செய்யும் அரோ ஹரா கோஷத்துடன் மகா தீபம் ஏற்றப்பட்டது.

சென்னை,

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தினமும் பல்வேறு வாகனங்களில் உற்சவ மூர்த்திகள் மாட வீதிகளில் வலம் வந்து அருள் பாலித்தனர். விழாவின் ஆறாம் நாளான 19ஆம் தேதி வெள்ளித் தேரோட்டமும், 20ஆம் தேதி பெரிய தேரோட்டமும் நடைபெற்றன.

இந்நிலையில், இன்று அதிகாலை அண்ணாமலையார் கருவறை முன்பாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க இன்று அதிகாலை 3.30  மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் அண்ணாமலையார் கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து, உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட அனைத்து சந்நிதானங்களிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

தீபத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் மாலை அளவில் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் ஏற்றப்பட  தேவையான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது.  மலையின் உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசிக்க , சுமார் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து இருந்தனர்.   கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்  மகாதீப காட்சியை தரிசிக்க பக்தர்கள் குவிந்து உள்ளனர். கடந்த 4 மணி  நேரமாக திருவண்ணாமலையில் மழை கொட்டி வருகிறது.  

மாலை 6 மணி அளவில் பக்தர்களின் மெய்சிலிர்க்க செய்யும் அண்ணாமலையாருக்கு.. அரோ ஹரா... கோஷத்துடன்  மகா தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் நமசிவாய கோஷம் எழுப்பினர்.

திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என 5 வகையான தீபங்கள் ஏற்றப்படும். இந்த தீப தரிசனத்தின் நன்மைகள் யாவை 

1. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும்.

2. திருவண்ணாமலை தீபத்தன்று மலையை பார்த்து “நமசிவாய” சொன்னால், அந்த மந்திரத்தை 3 கோடி தடவை உச்சரித்த புண்ணியம் கிடைக்கும்.

3. திருவண்ணாமலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் போது மலைக்கு உள் பகுதியிலும் பூஜைகள் நடக்கும் ஒலி கேட்டதாக ரமணர், சேஷாத்திரி சுவாமிகள் உள்பட பல அருளாளர்கள் கூறியுள்ளனர்.

4. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு அதைப் பார்த்து வணங்கியபடி கிரிவலம் வந்தால், அந்த ஜோதியின் கதிர்கள் நம் உடம்பில் பட்டு ஆன்மசக்தி அதிகரிக்கும் என்பது ஐதீகம்.

5. தீபத் திருநாளில் 5 தடவை (மொத்தம் 70 கி.மீ. தூரம்) கிரிவலம் வந்தால், அவர்கள் எவ்வளவு பெரிய பாவம் செய்திருந்தாலும், அவற்றில் இருந்து முழுமையான விமோசனம் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

6. மலை மீது தீபம் ஏற்றப்படும் போது, “தீப மங்கள ஜோதி நமோ, நம” என்ற பாடலை பாடி வழிபட்டால் வாழ்வில் மங்களம் பெருகும்.

7. கார்த்திகைத் தீபத்துக்கு மூன்றாவது நாள் மலையை பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது மிகச்சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு வரும் ஞாயிற்றுக்கிழமை (25-ந்தேதி) அண்ணாமலையார் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளும் கிரிவலம் வர உள்ளனர்.

8. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை காண சித்தர்கள் வருவார்கள் என்பது நம்பிக்கை. அப்படி வரும் சித்தர்கள் மலை உச்சியில் தீபம் ஏற்றும் கொப்பரை நெய்யில் சக்தி வாய்ந்த மூலிகைத் தைலங்களை சேர்த்து விடுவதாகச் சொல்கிறார்கள். இதனால் தீபத்தில் இருந்து வெளிப்படும் புகை தீய சக்திகளை அழிப்பதாக கருதப்படுகிறது.

9. திருவண்ணாமலை மலை சுமார் 2,668 அடி உயரம் கொண்டது. கீழ் இருந்து மலை உச்சி வரை செல்ல சுமார் 8 கி.மீ. பாதை உள்ளது. மலை ஏற சுமார் 4 மணி நேரமாகும்.

10. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு, சர்வாலய தீபம், கார்த்திகை விளக்கீடு, ஞானதீபம், சிவஜோதி, பரஞ்சுடர் என்றும் பெயர்கள் உண்டு.

11. கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் செல்பவர்களுக்கு ஆயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

12. கார்த்திகை தீபம் தினத்தன்று சிவலிங்கம் முன்பு நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், அவர்களது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும் என்பது நம்பிக்கை.

13. கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காட்சியை நேரில் பார்த்து வழிபடுபவர்களுக்கு சகல தானம் கொடுப்பதால் கிடைக்கும் புண்ணியங்கள் கிடைக்கும்.

14. கார்த்திகை  மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் திருவண்ணாமலை தலத்தில் ஏதாவது ஒரு இடத்தில் தீபம் ஏற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

15. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்ற பயன்படுத்தும் கொப்பரை சுமார் 2 ஆயிரம் லிட்டர் நெய் பிடிக்கும் அளவு கொண்டது.

16. மலை உச்சியில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு தெரியும்.

17. இந்த தீபம் சுமார் 11 நாட்கள் தொடர்ந்து எரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

18. திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, பரணி தீபம், அண்ணாமலையார் தீபம், விஷ்ணு தீபம், நாட்டுக் கார்த்திகை தீபம், தோட்டக் கார்த்திகை தீபம் என 5 வகையான தீபங்கள் ஏற்றப்படும்.

19. சிவபெருமான் கார்த்திகை தீபநாளில் அக்னியில் நடனம் ஆடுவதாக ஐதீகம். இந்த நடனத்துக்கு முக்தி நடனம் என்று பெயர்.

20. கார்த்திகை தீபம் தினத்தன்று ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்துவார்கள். ஆனால் திருவண்ணாமலையில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் இல்லை.

21. தீப நாளில் மலை மேல் தீபம் காண முடியாதவர்கள், தீப தரிசன நேரத்தில் அதை நினைத்தாலே, அதற்குரிய பலன்கள் கிடைக்கும் என்பது பெரியோர் வாக்கு.

22. திருவண்ணாமலை கார்த்திகை தீபத்துக்கு நிகராக இதுவரை வந்த ஆலயத்திலும் ஜோதி வழிபாடு ஏற்பட்டதில்லை.

23. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம், அண்டசராசரங்களுக்கும் தீப விளக்காக கருதப்படுகிறது.

24. திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபம், உலகத்தை எல்லாம் இயக்குகின்ற பரம்பொருள் ஒன்றே என்பதை “இறைவன் ஒருவனே” என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.

25. கார்த்திகை தீபத்தன்று அதிகாலை திருவண்ணாமலை கோவிலில் பரணி நட்சத்திர நேரத்தில் ஏற்றப்படும் பரணி தீபத்தை அங்குள்ள சொர்ண பைரவர் சன்னதியில் வைத்து விடுவார்கள். பிறகு மாலையில் அதைத்தான் மலை உச்சிக்கு எடுத்துச் சென்று தீபத்தை ஏற்றுவார்கள்.

26. திருவண்ணாமலை தீபத்தை காண கடந்த ஆண்டு சுமார் 20 லட்சம் பக்தர்கள் திரண்டனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

27. திருவண்ணாமலை மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதும் வணங்கினால் பாவம் நீங்கி பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகமாகும்.

28. திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டதும், “அண்ணாமலையாருக்கு அரோகரா” என்று பக்தர்கள் முழக்கமிடுவார்கள். இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? “இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உள்முகத்தால் அத்னவத ஆன்ம ஜோதியைக் காண்பது தான் இந்த தீப தரிசனம் ஆகும்”- இதை சொல்லி இருப்பவர் ரமண மகரிஷி.

29. பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக்குரிய தலம். இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது.

30. தீப திருவிழாவுக்காக இந்த ஆண்டு (2018) சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ஆயிரம் சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளது. நேற்று  முதலே சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Next Story