2019–ம் ஆண்டுக்கான ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் அறிவிப்பு


2019–ம் ஆண்டுக்கான ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 11 Dec 2018 10:25 PM GMT (Updated: 11 Dec 2018 10:25 PM GMT)

2019–ம் ஆண்டுக்கான சென்னை ஐகோர்ட்டு விடுமுறை தினங்கள் குறித்த அறிவிப்பை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் சி.குமரப்பன் வெளியிட்டுள்ளார்.

சென்னை, 

ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:–

சென்னை ஐகோர்ட்டுக்கு 2019–ம் ஆண்டு மே 1–ந்தேதி முதல் ஜூலை 2–ந்தேதி வரை கோடை விடுமுறை விடப்படுகிறது. அக்டோபர் 5–ந்தேதி முதல் 13–ந்தேதி வரை தசரா விடுமுறையும், டிசம்பர் 25–ந்தேதி முதல் 31–ந்தேதி வரை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறையும் விடப்படுகிறது. ஏப்ரல் 27–ந்தேதி, சனிக்கிழமையை தவிர மற்ற அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை ஆகும்.

ஜனவரி 1–ந்தேதி புத்தாண்டு விடுமுறை ஆகும். பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 14–ந் தேதி முதல் 17–ந் தேதி வரையிலும், மகாவீர் ஜெயந்திக்காக ஏப்ரல் 17–ந்தேதியும், புனித வெள்ளிக்காக ஏப்ரல் 19 மற்றும் 18–ந்தேதிகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே 1–ந்தேதியும், ரம்ஜான் பண்டிகைக்காக ஜூன் 5–ந்தேதியும், பக்ரீத் பண்டிகைக்காக ஆகஸ்டு 12–ந்தேதியும், சுதந்திர தினத்துக்காக ஆகஸ்டு 15–ந்தேதியும், கிருஷ்ண ஜெயந்திக்காக ஆகஸ்டு 23–ந்தேதியும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

விநாயகர் சதுர்த்திக்காக செப்டம்பர் 2–ந்தேதியும், மொஹரத்துக்காக செப்டம்பர் 10–ந்தேதியும், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்.2–ந்தேதியும் விடுமுறை விடப்படுகிறது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை, விடுமுறை நாளான (அக்டோபர் 27–ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அதனால், ஐகோர்ட்டுக்கு அக்டோபர் 28 மற்றும் 29–ந்தேதிகளில் விடுமுறை விடப்படுகிறது. அதேபோல, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 23 மற்றும் 24–ந்தேதிகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது.

இதுதவிர, குடியரசு தினம், தெலுங்கு வருடப்பிறப்பு, தமிழ் வருடப்பிறப்பு, மிலாது நபி ஆகியவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருகிறது.

இவ்வாறு அந்த அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Next Story