கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஷயான், மனோஜ் ஊட்டி கோர்ட்டில் 29-ந் தேதி ஆஜராக உத்தரவு


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஷயான், மனோஜ் ஊட்டி கோர்ட்டில் 29-ந் தேதி ஆஜராக உத்தரவு
x
தினத்தந்தி 24 Jan 2019 9:45 PM GMT (Updated: 24 Jan 2019 7:26 PM GMT)

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஷயான், மனோஜ் ஊட்டி கோர்ட்டில் 29-ந் தேதி ஆஜராக உத்தரவு

நீலகிரி,

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஷயான், மனோஜ் ஆகிய 2 பேரும் வருகிற 29-ந் தேதி ஊட்டி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 24.4.2017-ந் தேதி கொள்ளை நடந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பிரகாஷ் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டார். தாக்குதலில் மற்றொரு காவலாளி கிருஷ்ணபகதூர் படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மற்றும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இந்த சம்பவம் நடந்த 2 நாட்களில் சேலத்தில் நடந்த விபத்தில் டிரைவர் கனகராஜ் பலியானார். வழக்கு தொடர்பாக ஷயான், மனோஜ், மனோஜ்சாமி, திபு, ஜித்தின்ராய், உதயகுமார், சந்தோஷ்சாமி, சதீசன், சம்சீர் அலி, பிஜின் ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. அடுத்த (பிப்ரவரி) மாதம் 2-ந் தேதி கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு நீதிபதி வடமலை முன்பு விசாரணைக்கு வருகிறது.

இதற்கிடையே டெல்லியில் தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல், கோடநாடு வழக்கில் தொடர்புடைய ஷயான், மனோஜ் ஆகியோர் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம் சுமத்தி பேட்டி அளித்தனர்.

இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி டெல்லியில் ஷயான், மனோஜ் ஆகிய 2 பேரை கைது செய்து எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து ஷயான், மனோஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி கடந்த 18-ந் தேதி அரசு வக்கீல் பாலநந்தகுமார், ஊட்டி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.

இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி வடமலை பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து ஷயான், மனோஜ் ஆகியோர் தரப்பில் சென்னையை சேர்ந்த வக்கீல் அகிலேஷ், ஊட்டியை சேர்ந்த வக்கீல்கள் ஆனந்த், செந்தில் ஆகியோர் ஊட்டி கோர்ட்டில் நேற்று ஆஜராகி மனுத்தாக்கல் செய்தனர்.

முதல்-அமைச்சர் தரப்பில் ஷயான், மனோஜ் மீது போடப்பட்ட வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருவதால் ஷயான், மனோஜ் ஆகிய 2 பேர் ஆஜராவதற்கும், வழக்கு சம்பந்தமாக பதில் மனு தாக்கல் செய்வதற்கும் 10 நாட்கள் காலஅவகாசம் வழங்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது அரசு வக்கீல் பாலநந்தகுமார் சென்னை ஐகோர்ட்டில் நடந்து வரும் வழக்கு வேறு. ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கு வேறு. எனவே இன்று (நேற்று) அல்லது நாளை (இன்று) பதில் மனுத்தாக்கல் செய்வதுடன் இருவரையும் ஆஜர்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதை தொடர்ந்து நீதிபதி வடமலை வருகிற 29-ந் தேதி ஷயான், மனோஜ் ஆகியோர் ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தவும், பதில் மனுத்தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

Next Story