தபால் துறை தேர்வு தமிழில் நடத்தப்படும்: ஐகோர்ட்டில், மத்திய அரசு தகவல்


தபால் துறை தேர்வு தமிழில் நடத்தப்படும்: ஐகோர்ட்டில், மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 29 July 2019 11:09 PM GMT (Updated: 29 July 2019 11:09 PM GMT)

தபால்காரர், உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத்து தேர்வு நடத்தப்படும் என்று தபால்துறை அறிவித்தது.

சென்னை,

இதன்படி தேர்வையும் நடத்தியது. இதற்கு தமிழக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த தேர்வை பின்னர் மத்திய அரசு ரத்து செய்தது.

இதற்கிடையில், தபால் துறையில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்ற உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. எம்.எல்.ஏ. எழிலரசன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிற்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், ஐகோர்ட்டு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் ஆஜராகி, ‘தபால் துறை தேர்வை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் எழுத வேண்டும் என்று கடந்த 11-ந் தேதி பிறப்பித்த உத்தரவு மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் தேர்வு எழுதலாம் என்று கடந்த மே 10-ந் தேதி பிறப்பித்த உத்தரவு தொடர்ந்து பின்பற்றப்படும். இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை (இன்று) விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த வழக்கை விசாரிப்பதாக உத்தரவிட்டனர்.

Next Story