அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 6 ஆண்டுகளில் பாசனத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.13,606 கோடியில் செலவு செய்தது ரூ.6,973 கோடி தான் - துரைமுருகன் குற்றச்சாட்டு


அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 6 ஆண்டுகளில் பாசனத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.13,606 கோடியில் செலவு செய்தது ரூ.6,973 கோடி தான் - துரைமுருகன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 29 Sep 2019 10:45 PM GMT (Updated: 29 Sep 2019 9:04 PM GMT)

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 6 ஆண்டுகளில் பாசனத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.13,606 கோடியில் செலவு செய்தது ரூ.6,973 கோடி தான் என்று துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. பொருளாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபகாலமாக ஒரு வழக்கத்தை மேற்கொண்டு வருகிறார். எந்த ஊருக்கு போனாலும், எந்த விழாவில் உரையாற்றினாலும், தி.மு.க. ஆட்சியில் காவிரி - முல்லைப் பெரியாறு பிரச்சினையில் என்ன செய்தது என்று கேட்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்.

சட்டமன்றத்தில் எத்தனையோ முறை முதல்-அமைச்சரும், மற்ற அமைச்சர்களும் இப்படிப்பட்ட கேள்விகளை கேட்டபோதெல்லாம், நாங்கள் பலமுறை விவரமாக கூறி எங்களுக்கே அலுத்துபோய்விட்டது. அவர்களுக்கும் கேட்டு, கேட்டு காதுகளும் மரத்துப் போயிருக்கும். ஆனாலும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விழாக்கள் தோறும் இதே கேள்வியை கேட்டு வருகிறார். அப்படித்தான் சேலம் வீரபாண்டி தொகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசும்போதும், “தமிழக பொதுப்பணித் துறை அமைச்சராக அதிக காலம் இருந்தவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன். காவிரி - முல்லைப் பெரியாறு - பாலாறு பிரச்சினைகளுக்கு எந்த தீர்வும் காணாதவர்” என்று பேசியிருக்கிறார். அதாவது, தி.மு.க. அரசு இந்தப் பிரச்சினைகளில் எதுவும் செய்யவில்லை என்கிறார்.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு பெற்றுத்தர வித்திட்டது தி.மு.க. அரசு தான்.

2013-2014-ம் ஆண்டு முதல் 2018-2019-ம் ஆண்டு வரையிலான இந்த 6 ஆண்டில் பொதுப்பணித் துறைக்கு ஒதுக்கப்பட்ட பணம், பாசனத்திற்கென மொத்த ஒதுக்கீடு ரூ.13,606 கோடி. ஆனால், மொத்தம் செலவு செய்ததோ ரூ.6,973 கோடி தான். இதை நான் குற்றமாக சொல்லவில்லை. 2018-ம் ஆண்டை தணிக்கை செய்த இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறைத் தலைவரின் அறிக்கை 2019-ல் தெளிவாக தெரிவித்திருக்கிறது. இதையெல்லாம் படித்துவிட்டு அவர் பேசுவது நல்லது.

விவரம் இல்லாமல் பேசி; வில்லங்கத்தை விலைக்கு வாங்குவதைவிட, விவரத்தோடு பேச முதல்-அமைச்சர் முயல வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story