8 வயது சிறுமி கொலை: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜம் அலி என்பவர் கைது
சிவகாசியில் 8 வயது சிறுமி கொலை செய்யப்பட்டது தொடர்பாக, அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜம் அலி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ளது கொங்கலாபுரம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம். இவருக்கு பத்மா என்ற மனைவியும், சின்னமுத்து (வயது 11) என்கிற மகனும், பிரித்திகா (8) என்ற பெண் குழந்தையும் இருந்தனர். சிறுவன் சின்னமுத்து அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 6–ம் வகுப்பும், சிறுமி பிரித்திகா 3–ம் வகுப்பும் படித்து வந்தனர்.
கடந்த 20 ஆம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிய சிறுமி பிரித்திகா, பின்னர் தனது வீட்டின் பின்புறம் உள்ள பொது கழிப்பிடத்துக்கு செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் சிறுமியை பல இடங்களில் தேடினர். இரவு வரை எந்த தகவலும் கிடைக்காததால் சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் சிறுமியின் தந்தை சுந்தரம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் சப்–இன்ஸ்பெக்டர் முத்துமாரியப்பன் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடினார்.
இந்நிலையில் 21 ஆம் தேதி காலை கொங்கலாபுரம் கிராமத்தின் எல்லைப்பகுதியில் சிறுமி பிணமாக கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுமி பிரித்திகாவின் உடலை சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக, 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் சந்தேகத்தின் அடிப்படையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து தற்போது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மஜம் அலி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Related Tags :
Next Story