ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயற்சி: சென்னை விமானநிலையத்தில் ரூ.2½ கோடி போதைப்பொருள் பறிமுதல்


ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயற்சி: சென்னை விமானநிலையத்தில் ரூ.2½ கோடி போதைப்பொருள் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Feb 2020 9:30 PM GMT (Updated: 21 Feb 2020 9:09 PM GMT)

சென்னை விமான நிலைய சரக்குப்பிரிவில் ஆஸ்திரேலிய நாட்டிற்கு கடத்த இருந்த ரூ.2½ கோடி மதிப்புள்ள 16 கிலோ 465 கிராம் போதைப்பொருட்களை மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு சரக்குப்பிரிவில் இருந்து வெளிநாட்டிற்கு பெரும் அளவில் போதை பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், விமான நிலைய சரக்குப்பிரிவு சுங்க இலாகா அதிகாரிகளுடன் இணைந்து வெளிநாட்டிற்கு அனுப்ப இருந்த பார்சல்களை சோதனையிட்டனர்.

அப்போது, ஆஸ்திரேலியா நாட்டிற்கு அனுப்புவதற்காக வாய்புத்துணர்ச்சிக்கான சீரக உருண்டை என்ற பார்சல் இருந்தது. அந்த பார்சல் மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அவற்றை பிரித்து பார்த்தபோது, கடுமையான நெடி வந்தது. உடனே அதிகாரிகள் அந்த உருண்டைகளை ஆய்வுக்கு அனுப்பி பரிசோதித்த போது, அவை ஆப்கானிஸ்தான், பர்மா போன்ற நாடுகளில் விளையக்கூடிய ஓபியம் என்று தெரியவந்தது.

இந்த ஓபியம் என்பது ஹெராயின் போன்ற பயங்கர போதைப்பொருள் தயாரிக்க பயன்படுத்தக்கூடியது என தெரியவந்தது. இதையடுத்து, ரூ.2 கோடியே 33 லட்சம் மதிப்புள்ள 11 கிலோ 680 கிராம் ஓபியம் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர், பார்சல்களில் இருந்த முகவரிக்கு அதிகாரிகள் சென்று பார்த்தனர்.

பார்சலை அனுப்பிய வாலிபரை மத்திய போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

மேலும் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல இருந்த மற்றொரு பார்சலில் புடவை மற்றும் துணிகள் இருப்பதாக இருந்தது. அந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, துணிகளுக்கு நடுவே படிகதூள் பாக்கெட்டுகள் இருந்தன.

அவற்றை ஆய்வு செய்தபோது, எபித்தீன் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. அங்கு இருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 785 கிராம் போதை பொருளை கைப்பற்றினார்கள்.

2 தினங்களாக சரக்குப்பிரிவில் நடத்திய சோதனையில், ஆஸ்திரேலியாவிற்கு அனுப்ப இருந்த ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள 16 கிலோ 465 கிராம் போதை பொருளை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

* முகப்பேர் கிழக்கு புகழேந்தி சாலையை சேர்ந்த லதா (வயது 52), என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், 11 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றனர்.

* புதுவண்ணாரப்பேட்டை சாத்துமா நகரை சேர்ந்த யுகேந்திரா (20), கல்லூரி மாணவியான இவரிடம், மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் 2 பவுன் தங்கசங்கிலியை பறித்து சென்று விட்டனர்.

* வேளச்சேரி நேருநகர் அண்ணாத்துரை தெருவை சேர்ந்த பிரகாஷ் (18), என்பவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

* ஆலந்தூர் எம்.கே.என். சாலை மடுவின்கரை மேம்பாலம் அருகே காலி மைதானத்தில் இருந்த குப்பை மேட்டில் திடீரென பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி அணைத்தனர்.

* சென்னை, சூளைமேட்டில் டாஸ்மாக் கடை அருகே மதுபானங்களை இரவு நேரத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்த ஜிவானந்தம் (21), பிருந்தாவனம் (21) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story