கன்னியாகுமரி கொரோனா வார்டில் ஒரே நாளில் 3 பேர் மரணம்
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கன்னியாகுமரி,
கன்னியாகுமரியில் அரசு கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இதில், கன்னியாகுமரி, கோடிமுனை பகுதியை சேர்ந்த 40 வயது நபர் கடந்த 26ந்தேதி மரணம் அடைந்து உள்ளார். அவருக்கு ஏற்கனவே மூளைக்காய்ச்சல் மற்றும் கல்லீரல் பாதிப்பு இருந்தது என கூறப்பட்டது.
தொடர்ந்து இந்த வார்டில் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கேரளாவில் வேலை பார்த்து, திரும்பி வந்த 66 வயதான மீனவருக்கு காய்ச்சல் இருந்ததால், தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் இன்று உயிரிழந்தார்.
சவுதி அரேபியாவில் இருந்து கடந்த 13ந்தேதி ஊர் திரும்பி இருந்த இவருடைய மகன், ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளார். அதே வார்டில் இருந்த 2 வயது குழந்தை மற்றும் 24 வயது இளைஞரும் இன்று உயிரிழந்தனர். 3 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகளும் இன்னும் வெளிவரவில்லை.
இந்நிலையில், குமரி மருத்துவமனையின், கொரோனா வார்டில் உயிரிழந்த நபர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, ஏற்கனவே இங்கு உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என பரிசோதனையின் முடிவில் உறுதி செய்யப்பட்டது.
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் கொரோனா வார்டில் இன்று ஒரே நாளில் 3 பேர் உள்பட 6 பேர் வரை உயிரிழந்து உள்ளது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story