ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை புதிய அறிக்கையில் தகவல்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 26 Dec 2020 6:06 AM GMT (Updated: 26 Dec 2020 6:06 AM GMT)

ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனையின் புதிய அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத், 

கடந்த சில தினங்களுக்கு முன்பு 'அண்ணாத்த' படப்பிடிப்பில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அப்போது ரஜினிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.

ஆனாலும், சென்னை திரும்பாமல் ஐதராபாத்தில் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். எப்போது ரஜினி சென்னை திரும்புவார் என்ற தகவல் எதுவுமே வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினிகாந்த அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியானது  இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டிருந்த அறிக்கையில், ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவருக்குத் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. அன்றிலிருந்து அவர் தனிமையில் தான் இருக்கிறார். தொடர்ந்து அவரது உடல்நலனும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ரத்த அழுத்த அளவில் மாறுபாடு மற்றும் உடல் சோர்வைத் தாண்டி அவருக்கு வேறெந்த பிரச்சினைகளும் இல்லை. அவரது இதயத் துடிப்பு, இரத்த ஓட்டம் ஆகியவை சீராக இருக்கின்றன என்று தெரிவித்திருந்தது. 

இந்நிலையில் ரஜினிகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையின் புதிய அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடிகர் ரஜினியின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ரஜினியின் ரத்த அழுத்தத்தில் நேற்றை விட முன்னேற்றம் இருந்தாலும் ரத்த அழுத்தம் சற்று அதிகமாகவே உள்ளது. ரஜினிகாந்தின் ரத்த அழுத்தத்தை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் முழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது நடிகர் ரஜினிகாந்த்துக்கு ஓய்வு தேவை என்பதால் அவரை பார்க்க யாருக்கும் அனுமதி இல்லை.மருத்துவ பரிசோதனைகளில் கவலைப்படும் வகையில் எதுவும் கண்டறியப்படவில்லை. ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது என்று இன்று மாலை முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story