தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் - தமிழக ஆளுநர் வேண்டுகோள்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 April 2021 12:17 PM GMT (Updated: 8 April 2021 12:17 PM GMT)

தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நாளொன்றுக்கு 4 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், வரும் 10ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ள கட்டுப்பாடுகளை தமிழக அரசு இன்று அறிவித்தது. 

கொரோனா முதல் அலையின் போது பின்பற்றப்பட்ட முழு ஊரடங்காக இல்லாமல் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், ஷோ ரூம்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது.

அதே போல கோவில்கள், தியேட்டர்கள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் குறித்த அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழக அரசின் கொரோனா கட்டுப்பாடுகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பரவலுக்கு எதிராக தமிழக அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனா இரண்டாம் அலை காரணமாக முதியோர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தகுதியானவர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவை பின்பற்ற வேண்டும். கொரோனா நோயைக் கட்டுப்படுத்த அரசின் விதிமுறைகளை பின்பற்றி மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று அதில் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். 

Next Story