கொரோனா தடுப்பு நடவடிக்கை: அனைத்து மாவட்டங்களுக்கும் மூத்த ஐஏஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் - தமிழக அரசு அறிவிப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 8 April 2021 2:13 PM GMT (Updated: 8 April 2021 2:13 PM GMT)

கொரோனாவைக் கட்டுப்படுத்த அனைத்து மாவட்டங்களுக்கும் மூத்த ஐஏஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை, 

கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த, அனைத்து மாவட்டங்களுக்கும் மூத்த ஐஏஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டில் தற்போது பெருகிவரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த சில செயல்பாடுகளுக்கு தடை விதித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதனில், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நோய்த்தொற்றை குறைக்கும் பொருட்டு, மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் கள அளவிலான குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும் எனவும், அதே போன்று அனைத்து மாவட்டங்களிலும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும் எனவும் அரசு ஆணையிட்டுள்ளது.

அதன்படி, பெருநகர சென்னை மாநகராட்சியின் ஒவ்வொரு மண்டலத்திற்கும் (15 மண்டலம்) மூத்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் தலைமையிலான மாவட்ட வருவாய் அலுவலர்கள், காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் பொது சுகாதாரத்துறையின் துணை இயக்குநர் நிலை மற்றும் அதற்கு மேல் உள்ள மருத்துவ அலுவலர்களை உள்ளடக்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று, கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த, அனைத்து மாவட்டங்களுக்கும் மூத்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி அலுவலர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் / மாவட்டங்களுக்கு சென்று கொரோனா நோய் தடுப்பு பணிகளை முடுக்கிவிடவும் / கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை துரிதப்படுத்தவும், தொழிற்சாலை / அலுவலகங்கள் போன்ற இடங்களில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு உரிய ஏற்பாடுகள் செய்வதை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story