குழந்தைகளுக்கு கல்வி அளித்து, வாழ்வில் ஒளி ஏற்றுவோம் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிக்கை


குழந்தைகளுக்கு கல்வி அளித்து, வாழ்வில் ஒளி ஏற்றுவோம் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி மு.க.ஸ்டாலின் அறிக்கை
x
தினத்தந்தி 11 Jun 2021 9:03 PM GMT (Updated: 11 Jun 2021 9:03 PM GMT)

குழந்தைகளுக்கு கல்வி அளித்து வாழ்வில் ஒளி ஏற்றுவோம் என்று குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.

சென்னை,

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:-

குழந்தைகள் கல்வியைப் போற்று

குழந்தைகள் தொழில் செய்வதை அறவே நீக்கு

இந்த பூமியில் பிறந்த குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் மிக முக்கியமானது வாழும் உரிமை, பாதுகாப்பு உரிமை மற்றும் கல்வி உரிமை என்பனவாகும். அந்த உரிமைகளை அவர்களிடம் இருந்து பறிப்பது இயற்கை நியதிக்கும், சமூக நீதிக்கும் எதிரானது என்பதை கருத்தில் கொண்டு, குழந்தைகளின் நலன் பேணும் நெறியில், குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை வளர்க்கும் நாளாக உலகெங்கும் கடைப்பிடிக்கப்படும் நாள் ஜூன் 12 (இன்று). குழந்தைகளின் குழந்தை பருவத்தை சீர்கெடாமல் இருக்க விழிப்புணர்வை விதைக்கும் நாள் இது.

நாளைய நவீன உலகை உருவாக்கும் சிறந்த சிற்பிகள் நம் குழந்தைச் செல்வங்கள். ஆற்றல்மிக்க அவர்களது திறமைகளை கண்டறிந்து அந்த திறமைகளை மேம்படுத்தி, அவர்களின் உரிமைகளை பாதுகாத்து, அவர்களை கருத்தோடு பராமரிக்க வேண்டியது தமிழக மக்களின் கடமையாகும். கல்வி செல்வம் பெறவேண்டிய சமயத்தில், கடுமையான வேலை சுமைகளை சுமந்து நிற்கின்ற பிஞ்சு குழந்தைகளை, குழந்தை தொழிலாளர் முறை என்ற கொடுமையான வன்முறையிலிருந்து விடுவித்து, அவர்களுக்கு இனிமையான குழந்தை பருவத்தினையும், முறையான கல்வியினையும் உறுதி செய்வதே தமிழக அரசின் குறிக்கோளாகும்.

‘‘குழந்தைத் தொழிலாளர் இல்லா மாநிலம்’’

அந்த குறிக்கோளை அடையும் பொருட்டு அனைத்து வகையான தொழிலகங்களிலிருந்தும் குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலுமாக அகற்றி ‘‘குழந்தைத் தொழிலாளர் இல்லா மாநிலம்’’ என்ற நிலையினை தமிழகத்தில் கொண்டுவர, அனைத்து ஆக்கபூர்வமான செயல்திட்டத்தினையும் துரிதமாக நடைமுறைப்படுத்திட புதிதாக பொறுப்பேற்றுள்ள இந்த அரசு உறுதி பூண்டுள்ளது.

நம் அரசு, குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிடும் வகையில், பணியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளை முறையான பள்ளிகளில் சேர்த்து, அவர்களுக்கு அரசின் மூலமாக சீருடைகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், புத்தகப்பைகள், காலணிகள், கல்வி உபகரணங்கள், சத்தான மதிய உணவு, கட்டணமில்லா பஸ் பயண அட்டை, உயர் கல்வி பயிலும் முன்னாள் குழந்தை தொழிலாளர்களுக்கு அவர்களின் கல்வி காலம் முழுமைக்கும் ரூ.500 வீதம் மாதாந்திர உதவித்தொகை வழங்குதல் போன்ற பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

வாழ்வில் ஒளி ஏற்றுவோம்

தற்போது மத்திய அரசால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மட்டுமின்றி 18 வயது நிறைவடையாத வளரிளம் பருவத்தினரையும் அபாயகரமான தொழில்களில் அமர்த்தப்படுவதை முற்றிலுமாக தடை செய்து வெளியிடப்பட்ட சட்ட திருத்தத்தை அரசு மிகத் தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டை, குழந்தை தொழிலாளர்களற்ற மாநிலமாக மாற்ற நம் அரசு மேற்கொள்ளும் சீரிய முயற்சிகளுக்கு அரசு, அரசு சாரா நிறுவனங்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள், தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவரும் சீரிய ஒத்துழைப்பு நல்கவேண்டும்.

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம்

அவர்களுக்குக் கல்வி அளித்து வாழ்வில் ஒளியேற்றுவோம்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story