மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்: எடியூரப்பாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 July 2021 10:52 AM GMT (Updated: 4 July 2021 10:52 AM GMT)

மேகதாது அணை கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, 

மேகதாது அணை தொடர்பாக, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று கடிதம் எழுதியிருந்தார்.  

அந்த கடிதத்தில், மேகதாது அணை கட்டுவது தமிழகத்தைப் பாதிக்காது. மேகதாது திட்டத்திற்கு தமிழகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேகதாது அணை கட்டுவதன் மூலம் தமிழகம், கர்நாடகா என இரு மாநிலமும் பயன்பெறும். மேகதாது அணை குறித்து இரு மாநில பிரதிநிதிகளும் தொடர்புடைய அதிகாரிகள் முன்னிலையில் தேவைப்பட்டால் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அழைப்பு விடுத்திருந்தார். 

இந்நிலையில் மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என்று அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். 

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், மேகதாது அணை கட்டும் திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும். பெங்களூரு குடிநீர் தேவைக்காக என கூறப்படும் நிலையில் வெகுதொலைவில் அணை கட்டப்பட உள்ளது. எனவே, பெங்களூரு குடிநீர் தேவைக்காக அணைக்கட்டுவதாக கூறும் கருத்தை ஏற்க முடியாது. மேகதாது அணைக் கட்டுவதால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது என்ற கருத்தை ஏற்க இயலாது. குடிநீருக்காக ஏற்கனவே போதிய கட்டமைப்புகள் உள்ள நிலையில் இத்திட்டத்தை ஏற்க இயலாது. தமிழகம் - கர்நாடகா இடையே நல்லுறவு தழைக்க ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்று அதில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Next Story