சட்டம்-ஒழுங்கை சீரழிப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்


சட்டம்-ஒழுங்கை சீரழிப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 23 Sep 2021 7:15 PM GMT (Updated: 23 Sep 2021 7:15 PM GMT)

தமிழ்நாட்டில் அன்றாடம் கொலை குற்றங்கள் நடைபெறுவது வேதனை அளிக்கிறது. எனவே சட்டம்-ஒழுங்கை சீரழிப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

ஒரு மாநிலம் வளர்ச்சி பெற வேண்டுமெனில், அந்த மாநிலத்தின் மக்கள் வளம் பெற வேண்டுமெனில் மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும். மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடைவதற்கு மனிதவள மேம்பாடு, உட்கட்டமைப்பு வசதி, சிறப்பான கல்வி, சிறந்த ஆரோக்கியம் என பல்வேறு காரணிகள் இருந்தாலும், இவை எல்லாவற்றையும் விட மிக முக்கியமான காரணியாக விளங்குவது அமைதியான சூழல்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு மாநிலத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட வேண்டுமெனில் அங்கு அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும். மாறாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சிக்கு இடம் இருக்காது. ஏனெனில் அமைதி குன்றிய மாநிலங்களில் தொழிற்சாலைகளை தொடங்குவதற்கும், புதிய முதலீடுகளை மேற்கொள்வதற்கும் தொழில்முனைவோர்கள் முன்வர மாட்டார்கள் என்பதோடு அந்த மாநிலத்தில் உள்ள மக்களும் தங்களை காத்துக்கொள்வதிலேயே நேரத்தை செலவிட வேண்டிய சூழல் ஏற்படுமே தவிர, பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள இயலாது.

கண்டனம்

தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகள் ஒருபுறம் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா தொற்றுநோய் பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் இருப்பதையடுத்து, பொருளாதார வளர்ச்சி தொடங்கி இருக்கின்ற இந்த நேரத்தில் கடந்த 10 நாட்களாக ஆங்காங்கே அன்றாடம் கொலை குற்றங்கள் நிகழ்ந்து வருவது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.

இதுபோன்ற மனிதாபிமானமற்ற கொடூர சம்பவங்களுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். இது மட்டும் அல்லாமல், சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போலீஸ் துறையினரையே திருப்பி தாக்கும் சம்பவங்களும் ஆங்காங்கே நடைபெற்று இருக்கின்றன.

இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிச்சயம் பாதிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

அதிகாரிகளுக்கு அறிவுரைகள்

எனவே பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக விளங்கும் அமைதியான சூழலை உருவாக்கிடும் வகையில், முதல்-அமைச்சர் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் தனிக்கவனம் செலுத்தி, சட்டம்-ஒழுங்கை சீரழிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்கவும், கொலை குற்றங்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன்நிறுத்தி உரிய தண்டனை பெற்று தரவும் அதிகாரிகளுக்கு தக்க அறிவுரைகள் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story