தமிழக அனல் மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை உயர் அதிகாரி விளக்கம்


தமிழக அனல் மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை உயர் அதிகாரி விளக்கம்
x
தினத்தந்தி 3 Oct 2021 11:46 PM GMT (Updated: 3 Oct 2021 11:46 PM GMT)

தமிழ்நாட்டில் உள்ள 5 அனல் மின் நிலையங்களிலும் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. 12 நாட்களுக்கு இருப்பு உள்ளது என்று தமிழ்நாடு மின் பகிர்மான கழக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சென்னை,

தமிழகத்தில் உள்ள 5 அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் பற்றாக்குறை இருக்கிறது. போதிய அளவு இருப்பு இல்லை என்று ஒரு தகவல் வெளியானது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிர்மான கழக உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தினமும் 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு, கடந்த 2-ந் தேதி நிலவரப்படி 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு உள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்தின் முதல் அலகில் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையில், 4 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு இருக்கிறது.

2-வது அலகில் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு 7.74 நாட்களுக்கு தேவையான இருப்பு இருக்கிறது. வடசென்னை அனல் மின் நிலையம் முதல் அலகில் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையில், 6.8 நாட்களுக்கு தேவையான இருப்பு இருக்கிறது. மொத்தத்தில் சராசரியாக 5 நாட்களுக்கு தேவையான இருப்பு இருக்கிறது. வடசென்னை அனல் மின் நிலையத்தின் 2-வது அலகு தற்போது பராமரிப்புக்காக மூடப்பட்டுள்ளது.

இருப்பு இருக்கிறது

இதுதவிர பாரதீப் மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களில் தமிழ்நாட்டுக்கு அனுப்புவதற்காக 2 லட்சத்து 71 ஆயிரத்து 620 டன் நிலக்கரி தயார்நிலையில் இருக்கிறது. அது 3.8 நாட்களுக்கு போதுமானது. அதாவது 10 கோடியே 37 லட்சம் யூனிட்டுகள் மின்சார உற்பத்தி செய்யும் அளவுக்கு போதுமானது. மேலும், கப்பல்களில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 790 டன் நிலக்கரி வந்துகொண்டிருக்கிறது. இது 4 நாட்களுக்கு போதுமானது. இதை வைத்து 10 கோடியே 37 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும். எனவே தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திடம், 12 நாட்களுக்கு முழுமையாக மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு நிலக்கரி இருப்பு இருக்கிறது.

நாட்டில் நிலக்கரி பற்றாக்குறை இருப்பதை கருத்தில்கொண்டு, நிலக்கரி அமைச்சகம் தொடர்ச்சியாக வாரத்துக்கு 2 முறை எரிசக்தி அமைச்சகம், மத்திய மின்சார ஆணையம் (சி.இ.ஏ.), நிலக்கரி நிறுவனங்கள், ரெயில்வே மற்றும் அனல் மின் நிலையங்கள் கொண்ட துணைக்குழு கூட்டத்தை கூட்டி, நிலக்கரி கையிருப்பு நிலையை கண்காணித்து, அதற்கேற்றவாறு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நிலக்கரி கையிருப்பு, உற்பத்தி அடிப்படையில் நிலக்கரி ஏற்றிக்கொண்டு வருவதற்கான சரக்கு ரெயில் பெட்டிகளை ஒதுக்கீடு செய்துவருகிறது.

தட்டுப்பாடு இல்லை

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், நிலக்கரி அமைச்சகம், கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒடிசாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களில் இருந்து நிலக்கரி ஏற்றிக்கொண்டுவர தினமும் 13 ரெயில் பெட்டிகளை ஒதுக்கியிருந்தது. அதன்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் அங்கிருந்து 375 ரெயில் பெட்டிகளில் தமிழ்நாட்டுக்கு நிலக்கரி கொண்டு வந்தது. இதுதவிர தெலுங்கானாவில் இருந்து 17 ரெயில் பெட்டிகள் நிலக்கரி சப்ளை செய்தன. மொத்தத்தில் இந்த ஆண்டு இதுவரை இல்லாத வகையில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மிக அதிக எண்ணிக்கையாக 392 ரெயில் பெட்டிகளில் நிலக்கரி கொண்டுவரப்பட்டது.

ஒவ்வொரு சரக்கு ரெயில் பெட்டியிலும் 3,700 டன் நிலக்கரியை ஏற்றிக்கொண்டுவர முடியும். இதுதவிர கடந்த 1-ந் தேதி நடந்த துணைக்குழு கூட்டத்தில், அக்டோபர் மாதத்துக்கு தினமும் 13 முதல் 14 சரக்கு ரெயில் பெட்டிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பாரதீப் துறைமுகத்தில் இருந்து நிலக்கரி இருப்பை எடுத்துவர தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் கூடுதல் கப்பல்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிலக்கரி அளவு, நமது அனல் மின் நிலையங்களை எந்தவித இடையூறும் இல்லாமல் இயக்குவதற்கு போதுமானதாகும். எனவே அனல் மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.

Next Story