நாளை வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி...!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 12 Jan 2022 11:01 AM GMT (Updated: 12 Jan 2022 11:01 AM GMT)

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை, 

கொரோனா, ஒமைக்ரான் தொற்று தற்போது அதிக அளவு பரவ தொடங்கி உள்ளது. இதையடுத்து, வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது.

மேலும், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) முதல் தை பொங்கல், மாட்டு பொங்கல், காணும் பொங்கல், தைப்பூசம் உள்ளிட்ட விழாக்கள் தொடர்ந்து வருகின்றன. இதன் காரணமாக கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் நாளை மறுநாள் முதல் 18-ந்தேதி வரை 5 நாட்கள் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை வைகுண்ட ஏகாதசியை  முன்னிட்டு கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நிருபர்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “ வைகுண்ட ஏகாதேசி தினமான நாளைய தினம் கட்டுப்பாடுகளுடன் கோவில்களில் வழிபாடு செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை. 

வருகின்ற 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று திட்டமிடப்பட்டுள்ள வடபழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். கும்பாபிஷேக பணிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தற்போது நிறைவடைந்துள்ளன. ஏற்கனவே கும்பாபிஷேகம் நடத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி கும்பாபிஷேகம் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

Next Story