சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்


சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை பிரதமர் நரேந்திரமோடிக்கு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
x
தினத்தந்தி 12 May 2022 10:10 PM GMT (Updated: 12 May 2022 10:10 PM GMT)

சென்னையில் சுப்ரீம் கோர்ட்டு கிளை அமைக்கவும், தமிழை வழக்காடு மொழியாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,

மாநிலங்களில் பல்வேறு நிலைகளில் நீதிமன்றங்கள் இருப்பினும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும், அலுவலர்களும் பின்பற்றும் வகையில் நீதித்துறையின் அமைப்பு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டும், ஐகோர்ட்டும் நமது நாட்டின் பன்முகத்தன்மையோடு அமைய வேண்டும் என்ற கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

நாட்டின் பல்வேறு பிரிவுகளில் இருந்தும் நீதிபதிகள் நியமிக்கப்படும்போதுதான், பன்முகத் தன்மையும், ஒட்டுமொத்த சமூகத்தின் கண்ணோட்டங்களும், உணர்வுகளும் பிரதிபலிக்க ஏதுவாக இருக்கும்.

பிரதிநிதித்துவம்

அந்த வகையில், சுப்ரீம் கோர்ட்டு அமர்வில் அனைத்து மாநிலங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் அமைய வேண்டும்.

எனவே, ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளை நியமிப்பதில் சமூக பன்முகத்தன்மையையும், சமூக நீதியையும் பேணும் வகையில் உரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

நாட்டின் கூட்டாட்சித்தன்மை நீதித்துறையில் பிரதிபலிக்கப்பட வேண்டியது அவசியம். அதற்கு சுப்ரீம் கோர்ட்டின் நிரந்தர கிளைகளை பல்வேறு மாநிலங்களில் நிறுவ வேண்டும்.

நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களும் நீதிமன்றத்தை நேரடியாக அணுக வேண்டும் என்ற அடிப்படையில் தான் அரசமைப்பு சட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டு கிளை

சுப்ரீம் கோர்ட்டை பொறுத்தமட்டில் அதன் அருகில் இருக்கும் மாநிலங்களை சேர்ந்த குடிமக்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும் நிலை உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் மேல்முறையீடுகளின் எண்ணிக்கையை பொறுத்தமட்டில் அதனை சுற்றியுள்ள மாநிலங்களிலிருந்து தான் அதிக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகிறது என்பதை தரவுகளிலிருந்து அறிய முடிகிறது.

அரசியல் நிர்ணய சபையில் இதுதொடர்பாக நடைபெற்றுள்ள விவாதங்களும், நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் பரிந்துரைகளும், பல்வேறு சட்ட ஆணையங்களின் அறிக்கைகளும் சுப்ரீம் கோர்ட்டு கிளைகளை மாநிலங்களில் அமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உள்ளன.

தமிழ் வழக்காடு மொழி

எனவே, இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய இடங்களில் சுப்ரீம் கோர்ட்டின் நிரந்தர கிளைகளை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கூட்டாட்சி தத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் மற்றொரு விஷயத்தை தங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். ராஜஸ்தான், மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் செயல்படும் ஐகோர்ட்டில் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் அலுவல் மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக தமிழை ஆக்குவதற்கு ஏதுவாக, தமிழ் மொழியில் தரமான சட்ட நூல்களை வெளியிடுவதற்கு மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. செம்மொழியாகவும், நவீன மொழியாகவும் உள்ள தமிழ் மொழியினை சென்னை ஐகோர்ட்டின் வழக்காடு மொழியாக பயன்படுத்துவது முற்றிலும் பொருத்தமானதாக இருக்கும்.

நம்பிக்கை

சட்டத்தையும், நீதியையும் சாமானிய மக்களுக்குப் புரியவைப்பது நீதி வழங்கல் அமைப்பின் இன்றியமையாத கடமை. மாநிலத்தின் அலுவல் மொழியை ஐகோர்ட்டின் வழக்காடு மொழியாக ஆக்குவதில் உள்ள சிரமங்களை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் எளிதில் சரி செய்திட முடியும். எனவே, தமிழக அரசின் அலுவல் மொழியான தமிழை ஆங்கிலத்துடன் சேர்த்து சென்னை ஐகோர்ட்டு, மதுரை கிளை ஆகியவற்றின் அலுவல் மொழியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கைகள் எதிர்காலத்தில் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story