பந்தலூர் மலைப்பகுதியில் திரியும் ஆட்கொல்லி சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும் - சீமான்


பந்தலூர் மலைப்பகுதியில் திரியும் ஆட்கொல்லி சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும் - சீமான்
x

ஆட்கொல்லி சிறுத்தையைப் பிடிக்க எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காதது வன்மையான கண்டனத்துக்குரியது.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதிக்குட்பட்ட பந்தலூர் மலைப்பகுதியில் பொதுமக்களை சிறுத்தை தாக்கி வருவது தொடர் கதையாகிவிட்டது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு குழந்தைகளை சிறுத்தை தாக்கியதால் மக்கள் பெரும் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர். சிறுத்தையைப் பிடிக்கச்சொல்லி வனத்துறையிடம் பலமுறை புகாரளித்தும் இதுவரை ஆட்கொல்லி சிறுத்தையைப் பிடிக்க எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காதது வன்மையான கண்டனத்துக்குரியது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மூன்று பெண்களை சிறுத்தை தாக்கியதால் சகோதரி சரிதா பலத்த காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மேலும், கடந்த 04.01.2024 அன்று வீட்டிற்கு வெளியில் விளையாடி கொண்டிருந்த 4 வயது கீர்த்தனா என்ற குழந்தையை சிறுத்தை தாக்கியதில் பலத்த காயம் அடைந்து மருத்துவனையில் சேர்க்கப்பட்டார்.

அதனை தொடர்ந்து நேற்று 06.01.2024 மீண்டும் மூன்று வயது குழந்தை நான்சியை சிறுத்தை கடுமையாக தாக்கியதில் குழந்தையின் உயிர் பறிபோயுள்ள செய்தி மிகுந்த மனவேதனையை அளிக்கிறது.

ஆகவே, தமிழ்நாடு அரசு பொதுமக்களைத் தாக்கி கொன்றுவரும் ஆட்கொல்லி சிறுத்தையை வனத்துறை மூலம் விரைந்து பிடித்து கூடலூர் பகுதி மக்களைப் பாதுகாக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story