தீபாவளி பண்டிகை: சென்னையில் காற்றின் தரம் 'மோசம்' - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்


தீபாவளி பண்டிகை: சென்னையில் காற்றின் தரம் மோசம் - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
x

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது.

சென்னை,

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், வாழ்த்துகளை பரிமாறியும் தீபாவளியை கொண்டாடினர்.

சென்னையிலும் தீபாவளி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டது. அதன்படி, அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். ஆனால், சென்னையின் ஒருசில பகுதிகளில் மக்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்தும் பட்டாசு வெடித்தனர். இதன் காரணமாக அதிக அளவில் காற்று மாசு ஏற்பட்டது.

இந்நிலையில், சென்னையில் காற்றின் தரம் இன்று மோசமடைந்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி நேற்று இரவு மக்கள் பட்டாசு வெடித்ததன் காரணமாக சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது. காற்றின் தரக்குறியீடு 200-ஐ கடந்துள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மணலியில் காற்று தரக்குறியீடு 316ஆகவும், வேளச்சேரியில் 301 ஆகவும், அரும்பாக்கத்தில் 260 ஆகவும், ஆலந்தூரில் 256 ஆகவும், ராயபுரத்தில் 227 ஆகவும் பதிவாகியுள்ளது. காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு சுவாசப்பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது.


Next Story