தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை 44-வது இடம்: மதுரைக்கு கடைசி இடம்


தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை 44-வது இடம்: மதுரைக்கு கடைசி இடம்
x

கோப்புப்படம்

தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை 44-வது இடம் பெற்றுள்ளது. இதில் மதுரை கடைசி இடத்தில் உள்ளது.

மதுரை,

மத்திய அரசின் வீடு மற்றும் நகர்ப்புற அமைச்சகம், 'ஸ்வச் சர்வேக்‌ஷன்' திட்டத்தின் கீழ் கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் உள்ள தூய்மையான நகரங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அதில் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் மொத்தம் 45 நகரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

அதில் மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் 7 ஆயிரத்து 146 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்தது. 6 ஆயிரத்து 924 மதிப்பெண்களுடன் குஜராத்தின் சூரத் 2-வது இடத்தையும், 6 ஆயிரத்து 852 மதிப்பெண் எடுத்து மும்பையின் நவி மும்பை 3-வது இடத்தையும் பிடித்தன. அதில் கோவை 42-வது இடத்தையும், சென்னை 44-வது இடத்தையும், கடைசி இடமான 45-வது இடத்தை மதுரையும் பெற்றுள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு மொத்தம் இந்தியாவில் 73 நகரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அந்த ஆண்டில் முதல் இடத்தை மைசூரும், சண்டிகர் 2-வது இடத்தையும், திருச்சி 3-ம் இடத்தையும் பிடித்தன. கோவை 18-வது இடத்தையும், மதுரை 26-வது இடத்தையும், சென்னை 37-வது இடத்தையும் பிடித்தன.

2017-ம் ஆண்டு 434 நகரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் முதலிடத்தை இந்தூரும், 2-ம் இடத்தை போபாலும், 3-வது இடத்தை விசாகபட்டினமும் பிடித்தன.

2021-ம் ஆண்டு 1 லட்சத்திற்கு மேலான மக்கள் தொகை கணக்கீட்டின்படி பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் இந்தூர் முதலிடத்தையும், சூரத் 2-வது இடத்தையும், நவி மும்பை 3-வது இடத்தையும் பிடித்தன. இந்த பட்டியலில் தமிழக நகரங்கள் எதுவும் இடம் பெறவில்லை.


Next Story