தண்டவாளத்தில் கற்கள், மாட்டின் மண்டை ஓட்டை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி? - போலீசார் விசாரணை


தண்டவாளத்தில் கற்கள், மாட்டின் மண்டை ஓட்டை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி? - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Feb 2024 1:31 AM GMT (Updated: 21 Feb 2024 2:31 AM GMT)

ரெயில் தண்டவாளத்தில் பாறை கற்கள், இறந்த மாட்டின் மண்டை ஓட்டை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில், ரெயில் தண்டவாளத்தில் பாறை கற்கள், இறந்த மாட்டின் மண்டை ஓட்டை வைத்து ரெயிலை கவிழ்க்க சதி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

காந்திதாம் சந்திப்பிலிருந்து திருநெல்வேலி சந்திப்பு வரை செல்லும் காந்திதாம் எக்ஸ்பிரஸ் ரெயில் (20924) நாகர்கோவில் அருகே பார்வதிபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கற்களின் மீது மோதி பலத்த சத்தம் கேட்டது. இதையடுத்து ரெயிலை நிறுத்திய லோகோ பைலட், இறங்கி சென்று பார்த்தபோது, தண்டவாளத்தில் கற்கள் மற்றும் இறந்த மாட்டின் மண்டை ஓடு இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து லோகோ பைலட் பார்வதிபுரம் ரெயில்வே கிராசிங்கில் காவலுக்கு இருக்கும் கேட் கீப்பரிடம் விவரத்தை தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து நாகர்கோவில் சந்திப்பு ரெயில்வே போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் சிலர் சென்றதாக கேட் கீப்பர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story