கடைக்குள் புகுந்து பெண்ணுக்கு அரிவாள் வெட்டு


கடைக்குள் புகுந்து பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
x

திருவள்ளூரில் கடைக்குள் புகுந்து பெண்ணை அரிவாளால் 2 பேர் வெட்டினர். இதுத்தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் காக்களூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரோகினி வசந்தி (வயது 40). இவர் தன்னுடைய கணவர் கார்த்திகேயனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று 2 மகள்களுடன் அதே பகுதியில் தனியாக வசித்து வருகிறார். மேலும் இவர் திருவள்ளூர் ராஜாஜிபுரம் பகுதியில் சொந்தமாக தையல் கடை நடத்தி வருகிறார். அவரது கணவர் அபுதாபியில் வேலை செய்து வருகிறார். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு் காரணமாக திருவள்ளூர் குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து வழக்கு நடைபெற்றதில் மாதம்தோறும் ரோகினி வசந்திக்கு அவரது கணவர் ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதை எதிர்த்து அவரது கணவர் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இதன் காரணமாக கார்த்திகேயனின் குடும்பத்தினர் ரோகினி வசந்தியிடம் பணம் தர முடியாது என கூறி அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர்.

நேற்று முன்தினம் ரோகினி வசந்தி அவரது தையல் கடையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் திடீரென கடைக்குள் புகுந்து தாங்கள் வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார்கள். இதை தடுக்க வந்த அந்த கடையில் பணிபுரிந்த பாபு என்பவரையும் அவர்கள் மிரட்டி விட்டு அதே மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்கள். இதில் பலத்த காயமடைந்த ரோகினி வசந்தி சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து அவர் திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story