மின்னல் தாக்கி விவசாயி, பெண் பலி


மின்னல் தாக்கி விவசாயி, பெண் பலி
x

அரியலூர் மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின்போது மின்னல் தாக்கியதில் விவசாயி மற்றும் பெண் ஒருவர் பலியாயினர். மேலும் கால்நடைகள் உயிரிழந்தன.

அரியலூர்

இடி மின்னலுடன் பலத்த மழை

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் 2 மணி அளவில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் ஆண்டிமடம் அருகே உள்ள காட்டாத்தூர் (வ) கிராமம், கிழக்கு தெருவில் வசித்து வரும் புஷ்பராயர் என்பவருக்கு சொந்தமான மாடு, அவருக்கு சொந்தமான வயலில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது சுமார் 3.30 மணியளவில் திடீரென மின்னல் தாக்கி மாடு சம்பவ இடத்திலேயே செத்துபோனது.

இதேபோல் ஆண்டிமடம் அருகே சிலுவைச்சேரி மெயின் ரோடு தெருவில் வசித்து வரும், இளவரசன் என்பவருக்கு சொந்தமான 2 ஆடுகள், அழகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ராமையன் என்பவருக்கு சொந்தமான வயலில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 2 ஆடுகளும் உயிரிழந்தன. இதுகுறித்து ஆண்டிமடம் கால்நடை துறையினர் மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கன மழை பெய்தது.

விவசாயி பலி

இதேபோல் மல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன்(வயது 40). விவசாயி. இவரது மனைவி சரோஜா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை முதலே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது. இந்நிலையில்அன்பரசன் தனது வயலில் நடவு வேலையில் ஈடுபட்டிருந்த கூலி தொழிலாளர்களுக்கு மதிய உணவு வாங்கிக்கொண்டு சென்றுள்ளார். அப்போது இடி மின்னலுடன் பெய்த மழையின் காரணமாக நடந்து செல்லும் வழியிலேயே மின்னல் தாக்கி அன்பரசன் உயிரிழந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே இதுகுறித்து கீழப்பழுவூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அக்கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உடல் கருகிய பெண்

செந்துறை அருகே உள்ள தளவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி மாலைமணி(45). ஈச்சங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ்(55). இவர்கள் 2 பேரும் ஈச்சங்காடு ஏரிக்கரையில் மாடு மேய்த்துக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் மாலைமணி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். அருகே இருந்த செல்வராஜ் படுகாயம் அடைந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக பெண்ணாடத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் விரைந்து சென்று மாலைமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story