'நீட் தேர்வு விவகாரம்; மாணவர்களிடம் தி.மு.க. குழப்பத்தை ஏற்படுத்துகிறது' - பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு


நீட் தேர்வு விவகாரம்; மாணவர்களிடம் தி.மு.க. குழப்பத்தை ஏற்படுத்துகிறது - பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 25 Aug 2023 12:24 PM GMT (Updated: 25 Aug 2023 5:25 PM GMT)

நீட் தேர்வு ஒழிக்கப்பட்டால் அதை தே.மு.தி.க. நிச்சயம் வரவேற்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் இன்று தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்தார். அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் எனவும், அவர் நலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து நீட் தேர்வு விவகாரம் குறித்து பேசிய அவர், "இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் மட்டும் தான் எதிர்ப்பு நிலவுகிறது. நீட் தேர்வு ஒழிக்கப்பட்டால் அதை தே.மு.தி.க. நிச்சயம் வரவேற்கும். ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பதை நீட் தேர்வை எதிர்ப்பவர்களிடம் கேளுங்கள்.

இந்தியா முழுவதும் நடைபெறும் ஒரு தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மட்டும் எப்படி விலக்கு தர முடியும் என்பதை ஜனாபதிபதி, கவர்னர் உள்ளிட்ட அனைவரும் சொல்லும் போது, மாணவர்களை குழப்பி அவர்களை தற்கொலைக்கு தூண்டுவது நிச்சயமாக தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் தான்.

எனவே மாணவர்களை குழப்பாதீர்கள். உங்களால் முடிந்தால் இரும்புக்கரம் கொண்டு நீட் தேர்வை தடுத்து நிறுத்துங்கள். முடியாவிட்டால் தயவு செய்து மாணவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.


Next Story