தமிழகத்தில் நீட் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து சரிவு


தமிழகத்தில் நீட் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து சரிவு
x

தமிழகத்தில் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய போதிலும், தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது.

சென்னை,

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான 'நீட்' நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற்ற இந்த நீட் தேர்வை, நாடு முழுவதும் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதி இருந்தனர்.

இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதன்படி, இந்த தேர்வில் 9 லட்சத்து 93 ஆயிரத்து 69 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. இதன் தேர்ச்சி சதவீதம் 56.3 ஆகும். நீட் தேர்வு எழுதியவர்களில் உத்தர பிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருப்பதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், 1 லட்சத்து 32 ஆயிரத்து 167 பேர் தேர்வு எழுதியதில் 67 ஆயிரத்து 787 பேர் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதன் தேர்ச்சி 51.3% ஆகும். தமிழகத்தில் நீட் தேர்ச்சி விகிதம் கடந்த 2020-ம் ஆண்டு 57.44% ஆகவும், 2021-ம் ஆண்டு 54.4% ஆகவும் இருந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 51.3% ஆக சரிந்துள்ளது.

கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நடப்பு ஆண்டில் தமிழகத்தில் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு எழுதிய போதிலும், தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது. நீட் தேர்ச்சி விகித பட்டியலில் கடந்த ஆண்டு 23-வது இடத்தில் இருந்த தமிழகம், தற்போது 2022-ம் ஆண்டில் 28-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story