பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: 'உண்மை குற்றவாளிகள் கைது... 250 பேரிடம் விசாரணை' - டிஜிபி சைலேந்திரபாபு


பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: உண்மை குற்றவாளிகள் கைது... 250 பேரிடம் விசாரணை - டிஜிபி சைலேந்திரபாபு
x
தினத்தந்தி 25 Sep 2022 6:43 AM GMT (Updated: 25 Sep 2022 7:24 AM GMT)

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக டிஜிபி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு உள்பட நாட்டின் பல மாநிலங்களில் இஸ்லாமிய மத அமைப்பான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் கடந்த சில நாட்களுக்கு முன் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையை தொடர்ந்து தமிழ்நாட்டில் 11 பேர் உள்பட நாடு முழுவதும் 100-க்கும் மேற்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு உள்பட நாட்டின் பல பகுதிகளில் இஸ்லாமிய மத அமைப்புகள் போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, பிஎப்ஐ அமைப்பு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய பின்னர் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பெட்ரோல், மண்ணெண்ணெய் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

கோவை, மதுரை, கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து மத அமைப்புகள் தொடர்புடைய இடங்களில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் கடந்த 22-ந் தேதி சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது தமிழ்நாட்டில் 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இக்கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 1410 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். வாகனங்கள் மீது கல்வீச்சு போன்ற வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் தஞ்சாவூரில் பஸ் மீது கல்வீசி சேதம் விளைவித்த அரித்திரி, சலீம், சிராஜீதின் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில்களை சில அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வீடுகள், வாகனங்கள், வர்த்தக நிலையங்களை குறிவைத்து வீசிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இச்சம்பவங்கள் தொடர்பாக குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இச்செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இதுவரை 250 சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 100 நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மண்ணெண்ணெய் பாட்டில் வீசிய சில உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்களது இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கோவை மாநகரில் அதிவிரைவுப்படையின் இரண்டு பிரிவுகள், மாநில கமாண்டோ படை இரண்டு பிரிவுகள், சிறப்பு அதிரடிப்படை இரண்டு பிரிவுகள் என கூடுதலாக 3500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர் தாமரைக்கண்ணன் அங்கு முகாமிட்டுள்ளார்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.






Next Story