மலேசியாவில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் விஷ பாம்பு குட்டிகள் பறிமுதல் - சுங்க இலாகா அதிகாரிகள் நடவடிக்கை


மலேசியாவில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் விஷ பாம்பு குட்டிகள் பறிமுதல் - சுங்க இலாகா அதிகாரிகள் நடவடிக்கை
x

மலேசியாவில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வந்த 23 விஷ மற்றும் மலைப்பாம்பு குட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது விமானத்தில் வந்திறங்கிய சென்னையை சேர்ந்த பெண் பயணி மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அவரது உடமைகளில் இருந்த கூடையில் லேசாக அசைவது போல் தெரிந்தது.

இதையடுத்து சுங்க இலாக அதிகாரிகள் பையைத் திறந்து பாா்த்தனா். அதில் அரிய வகை உயிரினங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். அதில், வனப்பகுதியில் வசிக்கும் 23 விஷ மற்றும் மலைபாம்பு குட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி பெண் பயணியிடம் விசாரித்தபோது, வளர்க்க எடுத்து வந்திருப்பதாக கூறியுள்ளார். ஆனால் நோய்க் கிருமிகள் ஏதாவது இருக்கிறதா? என்ற சோதனைக்கு பின்னர், வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு உயிரினங்களை கொண்டு வருவதற்கான சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் அவரிடம் இல்லாதது தெரியவந்தது.

இதையடுத்து, எந்தவிதமான முறையான சான்றிதழ்களும் இல்லாததால் 23 பாம்பு குட்டிகளையும் மீண்டும் மலேசிய நாட்டிற்கு திருப்பி அனுப்ப சுங்க இலாகா அதிகாரிகளை சென்னை மத்திய வனவிலங்கு குற்றப்பிரிவு துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இதையடுத்து கடத்தி வரப்பட்ட 23 பாம்பு குட்டிகளையும் திரும்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளதாக சுங்க இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story