காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு


காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
x

காவிரியில் தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடகம் தொடர்ந்து பிடிவாதம் செய்து வருகிறது. எனவே தண்ணீர் திறக்க உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நாளை (திங்கட்கிழமை) வழக்கு தாக்கல் செய்கிறது.

தமிழ்நாட்டில் காவிரி நீரை நம்பி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து உள்ளனர். ஆனால் கர்நாடக அரசு, தமிழ்நாட்டுக்கு முறைப்படி தர வேண்டிய தண்ணீரை தரவில்லை.

முதல்-அமைச்சர் கடிதம்

இதன் காரணமாக தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் காய்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை உணர்ந்து சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட காவிரி நீர் ஒழுங்குமுறை குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகிய 2 அமைப்புகளும் விரைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத்தை 2 முறை சந்தித்து கோரிக்கை விடுத்தார். மேலும் காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

காவிரி மேலாண்மை கூட்டம்

இந்த சூழ்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையகூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக, கர்நாடக அதிகாரிகளுக்கு இடையே விவாதம் நடைபெற்றது. அப்போது கர்நாடக அதிகாரிகள் மிரட்டும் தொனியில் பேசியதால், தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் காவிரியில் 10 ஆயிரம் கனஅடி நீர் திறக்க அதிகாரிகள் உத்தரவிட்டதாக தகவல் பரவியது. ஆனால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில் காவிரி நீர் பங்கீட்டு பிரச்சினையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்வதை தவிர வேறு வழியில்லை என்று அமைச்சர் துரைமுருகன் அறிவித்து இருந்தார்.

சித்தராமையா பேட்டி

இதற்கிடையே கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேற்று மைசூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகம், கர்நாடகம் இடையே காவிரி நீர் பிரச்சினை தொடர்ந்து இருந்து வருகிறது. இதை அமர்ந்து பேசி இரு மாநிலங்களும் சுமுக தீர்வு காண வேண்டியது அவசியம். அதாவது இரு மாநிலங்களும் அமர்ந்து தண்ணீர் இல்லாத கஷ்ட காலங்களை எப்படி எதிர்கொள்வது என்று பேசி தீர்வு காண்பது அவசியம். இந்த ஆண்டு தமிழத்திற்கு காவிரியில் கர்நாடகம் தர வேண்டிய அளவு தண்ணீர் இன்னும் தராமல் இருப்பதால், அதை உடனடியாக தர வேண்டும் என்று தமிழக அரசு கேட்டு வலியுறுத்தி வருகிறது.

திறந்துவிட முடியாத நிலைமை

இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதுமான அளவில் மழை பெய்யவில்லை. இதனால் அணைகளுக்கு போதிய அளவில் நீர் வரவில்லை. அதனால் தமிழகத்திற்கு இந்த ஆண்டு காவிரி யில் தண்ணீர் திறந்து விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது ஏற்கனவே காவிரியில் கணிசமான நீர் திறந்து விடப்பட்டு இருக்கிறது. அதனால் கூடுதலாக தண்ணீர் திறந்து விட இயலாது. அதனால் 2 மாநிலங்களும் இந்த கஷ்ட காலத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. கேரளா மற்றும் குடகு பகுதிகளில் மழை குறைவாக பெய்துள்ளது. அதனால் நீர்வரத்து குறைந்துள்ளது. நிலைமையை பார்த்து நீர் திறந்துவிடப்படும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று கர்நாடகம் பிடிவாதம் பிடித்து வரும் நிலையில், இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு நாளை வழக்கு தாக்கல் செய்கிறது.

இதனை அமைச்சர் துரைமுருகன் உறுதிபடுத்தி உள்ளார். இதுகுறித்து தினத்தந்தி நிருபருக்கு நேற்று அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வறட்சி காலத்தில்...

தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு நியாயமாக நடப்பு ஆண்டு ஜூன் 1-ந்தேதியில் இருந்து இம்மாதம் 11-ந்தேதி வரை 53.27 டி.எம்.சி. நீரை திறந்து விட்டு இருக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு வழங்கியதோ 15.79 டி.எம்.சி. மட்டும்தான். ஆக நமக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை 37.97 டி.எம்.சி. ஆகும்.

சுப்ரீம் கோர்ட்டு ஆணைப்படி, காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இந்த 2 குழுக்களும் சேர்ந்துதான் நமக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து நீரை வாங்கி கொடுக்க வேண்டும். ஆனால் இந்த 2 குழுக்களும் ஏனோ, தானோ என்று இருப்பது மட்டும் அல்லாது, வறட்சி காலத்தில் இருக்கிற நீரை எப்படி தமிழ்நாடு, கர்நாடகம் பங்கீட்டு கொள்ள வேண்டும் என்ற ஒரு கொள்கையையும் வகுக்கவில்லை.

நாளை வழக்கு தாக்கல்

சுப்ரீம் கோர்ட்டு ஆணைப்படி உருவானதுதான் காவிரி நீர் மேலாண்மை ஆணையம். அதனையும் மதிக்கவில்லை, நீரும் தர மாட்டேன் என்று கர்நாடக அரசு சொல்வது சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறுவதாகும். எனவே இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு எங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கேட்டு நாளை வழக்கு தாக்கல் செய்ய போகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நீதி

முன்னதாக, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து துரைமுருகன் நிருபர்களை நேற்று சந்தித்தார். அப்போது அவரிடம், நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- காவிரி நதிநீர் பெறுவது குறித்து சுப்ரீம் கோர்ட்டை நாடுவதாக தெரிவித்துள்ளீர்கள். நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என நம்பு கிறீர்களா?

பதில்: சுப்ரீம் கோர்ட்டில் நீதி கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது.

ஆணையத்தின் செயல் திருப்தி அளிக்கவில்லை

கேள்வி: டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பயிர்கள் கருகி வருகிறதே?

பதில்: நடவடிக்கை எடுக்க வேண்டியது காவிரி நீர் மேலாண்மை ஆணையம்தான். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. 15 ஆயிரம் கன அடி நீர் தருவதாக சொன்னார்கள். ஆனால் இப்போது அதையும் குறைக்கிறார்கள்.

கேள்வி: காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?

பதில்: எனக்கு திருப்தி அளிக்கவில்லை.

பேச்சுவார்த்தை

கேள்வி: கர்நாடகாவில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதே?

பதில்: கர்நாடகாவில் 82 சதவீதம் நீர் உள்ளது என்று நேற்று (நேற்று முன்தினம்) அறிக்கை கொடுத்துவிட்டேன்.

கேள்வி: காவிரி பிரச்சினை குறித்து கர்நாடக அரசுடன் நேரடியாக பேசுவீர்களா?

பதில்: கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த என்ன இருக்கிறது?.

இவ்வாறு துரைமுருகன் பதில் அளித்தார்.


Next Story