மேடையில் எங்களது பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை - கனிமொழி எம்.பி பேட்டி


மேடையில் எங்களது பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை - கனிமொழி எம்.பி பேட்டி
x
தினத்தந்தி 28 Feb 2024 9:14 AM GMT (Updated: 28 Feb 2024 10:19 AM GMT)

தி.மு.க. அழியும் என சொன்னவர்கள் பலரும் காணாமல் போயுள்ளனர் என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

குலசேகரப்பட்டினம் திட்டம் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை தி.மு.க. அரசு தொடர்ந்து எடுத்தது. குலசேகரப்பட்டினம் ஏவுதளத்திற்கு அடிக்கல், திமுக அரசின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும்.

பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் கால்வாசிதான் மத்திய அரசு நிதி வழங்குகிறது. முக்கால்வாசி மாநில அரசு நிதியில்தான் அது நடைமுறைப் படுத்தப்படுகிறது. பிற மாநிலங்களில் இருந்து வந்து இத்திட்டத்தை பார்வையிடும் எம்.பி.க்கள் 'இதை ஏன் முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டம் என குறிப்பிடப்படவில்லை' என கேள்வி எழுப்புகின்றனர்.

மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது. நல்ல திட்டங்களை தி.மு.க. எப்போதும் எதிர்ப்பதில்லை. தேர்தல் நேரம் என்பதால் திட்டங்களை அறிவித்துள்ளார்கள். இதுவரை தமிழக முதல்-அமைச்சர் வைத்த ஒரு கோரிக்கையை கூட மத்திய அரசு நிறைவேற்றவில்லை. தி.மு.க. அழியும் என சொன்னவர்கள் பலரும் காணாமல் போயுள்ளனர்.

குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு நிலத்தை மாநில அரசுதான் வழங்கியது. மேடையில் எங்களது பெயரை சொல்ல கூட பிரதமருக்கு மனமில்லை முதல்-அமைச்சரின் கனவு திட்டம் என்பதால் நிகழ்ச்சியில் பங்கேற்றோம்.

அரசியல் வேறு, மதம் வேறு என்பதை உணர்ந்தவர்கள் தமிழக மக்கள். தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடும் இயக்கம் தி.மு.க. என்பதை மக்கள் அறிவர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story