துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதிக்கு செய்தது என்ன? - மு.க.ஸ்டாலின் கேள்வி


துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் போடி தொகுதிக்கு செய்தது என்ன? - மு.க.ஸ்டாலின் கேள்வி
x
தினத்தந்தி 31 March 2021 10:27 AM GMT (Updated: 31 March 2021 10:27 AM GMT)

துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், போடி தொகுதிக்கு செய்தது என்ன? என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

போடி,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கம்பம் தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர் போட்டியிடும் என்.ராமகிருஷ்ணன்,  பெரியகுளம் - தனி தொகுதியில் போட்டியிடும் சரவணகுமார், ஆண்டிப்பட்டி திமுக வேட்பாளர் மகராஜன், மற்றும் போடிநாயக்கனூர் திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு ஆதரவாக, ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். 

அப்போது பேசிய அவர், 

 போடிநாயக்கனூர் திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வத்துக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். தங்கதமிழ்ச்செல்வன் வெள்ளை மனதிற்கு சொந்தக்காரர் அவர்.

முதலமைச்சர் பழனிசாமி தோல்வி பயத்தில் என்ன பேசுகிறாம் என்று தெரியாமல் பேசுகிறார். தேர்தலில் அதிமுக நிச்சயமாக தோல்வி அடையும். அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்து முதன்முதலில் துரோகம் இழைத்தவர் ஓ.பன்னீர்செல்வம். 

துணை முதலமைச்சராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், போடி தொகுதிக்கு என்ன செய்தார்?. போடிநாயக்கனூரில் ஒரு சிறிய அளவில் கூட தொழிற்சாலை ஏற்படுத்தவில்லை. 18 ஆம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றவில்லை. குமுளியில் வடிகால் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கவில்லை. முல்லை பெரியார் அணைக்கு நிரந்த தீர்வு காணவில்லை. படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கவில்லை. முதியோர் ஓய்வூதியம் இங்கு இருக்கும் அனைவருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்யவில்லை.

தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்த பன்னீர் செல்வம் தேனி மாவட்ட மக்களுக்கு துரோகம் இழைக்கமாட்டாரா? என மக்கள் மத்தியில் கேள்வி எழுப்பினார்.

Next Story