தென்கொரிய அதிபருடன் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு


தென்கொரிய அதிபருடன் டிரம்ப் தொலைபேசியில் பேச்சு
x
தினத்தந்தி 20 May 2018 11:00 PM GMT (Updated: 20 May 2018 8:15 PM GMT)

வடகொரியா விவகாரம் குறித்து தென்கொரிய அதிபருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார்.

சியோல்,

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே சிங்கப்பூரில் அடுத்த மாதம் 12-ந் தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேசுவதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதற்கு இடையே தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை ஒரு முறையும், சீன அதிபர் ஜின்பிங்கை இரு முறையும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் சந்தித்து பேசினார். டிரம்புடனான சந்திப்பு குறித்து அவர் இணக்கமான கருத்துக்களையே வெளியிட்டு வந்தார்.

ஆனால் திடீரென வடகொரியாவின் போக்கில் மாறுதல் தென்படுகிறது. ஒருதலைப்பட்சமாக தன்னை அணு ஆயுதங்களை கைவிடுமாறு அமெரிக்கா நிர்ப்பந்திப்பதாக வடகொரியா கருதுகிறது. அது மட்டுமின்றி டிரம்புடனான பேச்சு வார்த்தையை ரத்து செய்யவும் தயங்கப்போவது இல்லை என்கிற ரீதியில் அந்த நாடு கருத்து தெரிவித்தது.

டிரம்பும் தன் பங்குக்கு, “கிம் ஜாங் அன் அணு ஆயுதங்களை கைவிட்டால், அவர் ஆட்சி அதிகாரத்தில் தொடர்வார். ஆனால் அவர் அமெரிக்காவுடன் அதற்காக ஒப்பந்தம் செய்துகொள்ளாவிடில் வடகொரியா அழிவை சந்திக்க வேண்டியது வரும்” என்றார்.

இந்த நிலையில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன்னை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அப்போது அவர் சிங்கப்பூரில் நடக்க உள்ள பேச்சு வார்த்தையை ரத்து செய்யப்போவதாக வடகொரியா விடுத்த மிரட்டல் பற்றி முக்கிய ஆலோசனை நடத்தினார். இது பற்றி தென்கொரிய அதிபர் மூன் ஜே இன்னின் அலுவலகம் ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில், “சமீப காலமாக வடகொரியா எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி டிரம்பும், மூன் ஜே இன்னும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டனர்” என கூறப்பட்டு உள்ளது.

Next Story