மெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் விரைவில் அவசர நிலை பிரகடனம் - டிரம்ப் சூசக தகவல்


மெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் விரைவில் அவசர நிலை பிரகடனம் - டிரம்ப் சூசக தகவல்
x
தினத்தந்தி 11 Jan 2019 11:15 PM GMT (Updated: 11 Jan 2019 8:03 PM GMT)

மெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் தொடர்பாக, அமெரிக்காவில் விரைவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படும் என டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.

வாஷிங்டன்,

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்தில் டிரம்ப் விடாப்பிடியாக உள்ளார். அதே போல் இந்த திட்டத்துக்கு உள்நாட்டு நிதியை ஒதுக்க முடியாது என்பதில் ஜனநாயக கட்சியினர் உறுதியாக உள்ளனர். இது தொடர்பாக சமீபத்தில் ஜனநாயக கட்சி தலைவர்களுடன் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தபோது, டிரம்ப் வெளி நடப்பு செய்தார்.

இந்த நிலையில் தெற்கு எல்லையையொட்டி உள்ள டெக்சாஸ் மாகாணத்துக்கு டிரம்ப் பயணம் மேற்கொண்டார். அங்கு அவர் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் அமெரிக்காவில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவீர்களா? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த டிரம்ப், “ஆம், அது பற்றி நான் தீவிரமாக ஆலோசித்து வருகிறேன். நாம் அதை விரைவாக செய்ய வேண்டும். ஏனெனில் அது மட்டும்தான் தீர்வு. அதற்கு செலவு கிடையாது. நாம் ஆண்டு தோறும் எல்லை பாதுகாப்புக்கு செலவிடுவதை விட, சுவருக்கு குறைந்த செலவுதான் ஆகும்” என தெரிவித்தார்.


Next Story