அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் 6 அணுமின் நிலையங்கள் அமைக்க முடிவு


அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இந்தியாவில் 6 அணுமின் நிலையங்கள் அமைக்க முடிவு
x
தினத்தந்தி 14 March 2019 4:41 AM GMT (Updated: 14 March 2019 7:16 AM GMT)

இந்தியாவில் 6 அமெரிக்க அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கு இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

வாஷிங்டன்,

இந்தியாவில்  6  அமெரிக்க அணுமின் நிலையங்கள் அமைப்பதற்கு  இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்தியா - அமெரிக்கா இடையேயான முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு பேச்சு வார்த்தை  விஜய் கோகலே மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரி ஆண்ட்ரே தாம்சன் இடையே நடைபெற்றது. 

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.   இந்த அறிக்கையில், இந்தியாவில் 6 அமெரிக்க அணு மின் நிலையங்கள் அமைப்பது உட்பட  பாதுகாப்பு மற்றும் சிவில் அணு ஒத்துழைப்பில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்த இருவரும் ஒப்புக்கொண்டனர்” என்று கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக, கடந்த 2008 ஆம் ஆண்டு இந்தியா- அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுக்கு ஊக்கம் அளித்தது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம்  இந்தியாவுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டதால், அமெரிக்கா, பிரான்சு, ரஷ்யா, கனடா, அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, ஜப்பான், வியட்நாம், வங்காளதேசம், கஸகஸ்தான், தென்கொரியா ஆகிய நாடுகளுடன் இந்தியா சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வகை ஏற்பட்டது. 

48 நாடுகள் கொண்ட அணுசக்தி விநியோக கூட்டமைப்பில் (என்.எஸ்.ஜி) இந்தியா உறுப்பினராகவும் அமெரிக்கா தனது உறுதியான ஆதரவை அளிக்கும் என இந்தியாவிடம் உறுதி அளித்தது.

அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல், இந்தியாவை என்.எஸ்.ஜியில் உறுப்பு நாடாக சேர்க்கக்கூடாது என்று சீனா  எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 


Next Story