புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் - கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி


புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபர் - கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி
x
தினத்தந்தி 21 July 2019 10:30 PM GMT (Updated: 21 July 2019 8:39 PM GMT)

நைஜீரியா விமான நிலையத்தில், புறப்பட தயாராக இருந்த விமானத்தின் இறக்கையில் ஏறிய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தை கடத்தல் முயற்சி என நினைத்து பயணிகள் பீதி அடைந்தனர்.

அபுஜா,

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அஸ்மான் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. ஓடுபாதையில் நின்றிருந்த விமானம் புறப்பட்டு செல்வதற்காக கட்டுப்பாட்டு அறையில் இருந்து சிக்னலை எதிர்பார்த்து காத்திருந்தது. அப்போது திடீரென விமானத்தின் இடதுபுற இறக்கை மீது வாலிபர் ஒருவர் ஏறினார்.

பின்னர் அவர் விமானத்துக்குள் நுழைவதற்கு முயற்சி செய்தார். இது விமானத்தில் இருந்த பயணிகள் மத்தியில் பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தியது. அந்த நபர் பயங்கரவாதியாக இருக்கலாம் என்றும், விமானத்தை கடத்துவதற்கு முயற்சி நடப்பதாகவும் நினைத்து பயணிகள் கூச்சலிட்டனர்.

இது பற்றி தெரியவந்ததும் விமானி உடனடியாக விமானத்தின் என்ஜினை அணைத்தார். மேலும் விமான நிலையத்தில் உள்ள போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து, கைது செய்தனர்.

அந்த வாலிபர் யார்? அவர் எதற்காக விமானத்தில் ஏறினார்? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், வாலிபர் விமானத்தின் இறக்கையில் ஏறியதை விமானத்தில் இருந்த பயணிகள் சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Next Story