காஷ்மீர் விஷயத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஏற்க முடியாது -இந்தியா திட்டவட்டம்


காஷ்மீர் விஷயத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஏற்க முடியாது -இந்தியா திட்டவட்டம்
x
தினத்தந்தி 23 July 2019 5:33 AM GMT (Updated: 23 July 2019 7:48 AM GMT)

காஷ்மீர் விவகாரத்தில் உதவுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவதற்கு இந்தியா திட்டவட்ட மறுப்பு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி

இந்தியா, பாகிஸ்தான் இடையேயான காஷ்மீர் பிரச்சினைக்கு மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் விவகாரத்தால், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துவந்த ராணுவ நிதியுதவியை அதிபர் டிரம்ப் நிறுத்திவைத்துள்ள நிலையில், இருதரப்பு உறவை மேம்படுத்தும் நோக்கில் இம்ரான் கான் அமெரிக்கா சென்றார்.

தலைநகர் வாஷிங்டனில் அதிபர் டொனால்டு டிரம்பை இம்ரான் கான் சந்தித்து பேசினார். அப்போது, பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு டொனால்டு டிரம்ப் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய டெனால்ட் டிரம்ப், காஷ்மீர் பிரச்சினையில் சுமூக தீர்வை ஏற்படுத்த உதவுமாறு இந்திய பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாகக் கூறினார்.

இதுதொடர்பாக மோடியிடம் பேசவிருப்பதாகக் கூறிய அவர், காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தராக செயல்படவும் விருப்பம் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில், காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யுமாறு அமெரிக்க அதிபர் டிரம்பிடம், பிரதமர் மோடி கேட்கவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

டுவிட்டரில் இதனை பதிவிட்டுள்ள வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ரவீஷ்குமார், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்சினை உள்நாட்டு விவகாரத்துறை மூலமாக தீர்க்கப்படும் என்று கூறினார்.

காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நபர் தலையீட்டை இந்தியா ஒருபோதும் விரும்பாது என்றும் தெரிவித்தார். மேலும் சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் இறுதி ஒப்பந்தம் அதற்கான தீர்வை ஏற்படுத்தும் என்றும் டுவிட்டரில் கூறியுள்ளார். 



Next Story