ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்பப்பெறப்படுமா? - டிரம்ப் பதில்


ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்பப்பெறப்படுமா? - டிரம்ப் பதில்
x
தினத்தந்தி 21 Aug 2019 1:51 PM GMT (Updated: 21 Aug 2019 8:10 PM GMT)

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்பப்பெறப்படுமா என்பது குறித்து டிரம்ப் பதில் அளித்துள்ளார்.

காபூல்,

ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அரசுக்கு எதிராக தலீபான் பயங்கரவாதிகள் சண்டையிட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்குவதற்காக அமெரிக்க படைகள் அங்கு முகாமிட்டு உள்ளன. எனினும் தலீபான்களை முழுமையாக வீழ்த்த முடியாமல் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க படைகள் திணறி வருகின்றன. அதே சமயம் இந்த உள்நாட்டு போரில் அப்பாவி மக்கள் அதிகமாக கொல்லப்படுகிறார்கள்.

எனவே உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அரசு தலீபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. குறிப்பாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக தலீபான் பிரதிநிதிகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இடையே இதுவரை 8 கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இரு தரப்பிலும் ஒருமித்த கருத்து ஏற்பட்டு இருப்பதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இரு தரப்பின் தலைமை முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக திரும்பப்பெறப்படாது என ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “தலீபான் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தை சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதன் மூலம் என்ன நடக்கிறது, என்ன பலன் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். எனினும் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க வீரர்கள் அனைவரும் திரும்பிவிடமாட்டார்கள். பிராந்திய ஸ்திரதன்மையை உறுதி செய்ய சில வீரர்கள் அங்கு தொடர்ந்து இருப்பார்கள்” என கூறினார்.


Next Story