சுற்றுலா நினைவாக கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை?


சுற்றுலா நினைவாக கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை?
x
தினத்தந்தி 21 Aug 2019 10:45 PM GMT (Updated: 21 Aug 2019 8:38 PM GMT)

சுற்றுலா நினைவாக கடற்கரை மணலை பாட்டிலில் சேகரித்த தம்பதிக்கு 6 ஆண்டு சிறை விதிக்கப்படுமா என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

ரோம்,

இத்தாலியின் சர்தீனியா தீவில் உள்ள கடற்கரைகளில் வெள்ளை மணல் காணப்படுகிறது. மிகவும் மென்மையாகவும், பொன்னிறமாகவும் இருக்கும் இந்த மணலை சுற்றுலா பயணிகள் அள்ளி செல்வதால் அங்குள்ள கடற்கரைகள் அழிவு பாதையை நோக்கி செல்வதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

எனவே கடற்கரை மணலை எடுத்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கும் சட்டம் அங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில் பிரான்சை சேர்ந்த ஒரு இளம் தம்பதி அண்மையில் சர்தீனியா தீவுக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் சுற்றுலாவை முடித்துவிட்டு, பிரான்ஸ் திரும்ப படகு ஏறுவதற்காக காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களது காரை நிறுத்தி சோதனை செய்தபோது, காரில் 14 பிளாஸ்டிக் பாட்டில்களில் 40 கிலோ எடைகொண்ட கடற்கரை மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடற்கரை மணலை திருடிய குற்றச்சாட்டில் போலீசார் அந்த தம்பதியை கைது செய்தனர்.

ஆனால், தாங்கள் செய்தது சட்டத்துக்குப்புறம்பான செயல் என்பது தங்களுக்கு தெரியாது என்றும், சுற்றுலா வந்ததன் நினைவாக கடற்கரை மணலை எடுத்து செல்ல முயன்றதாகவும் அந்த தம்பதி கூறினர். எனினும் அதனை ஏற்க மறுத்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை உள்ளூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 3000 யூரோ (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2 லட்சத்து 50 ஆயிரம்) அபராதமும், 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும்.


Next Story