பெரும் சேதத்தை ஏற்படுத்தும் சூறாவளிகள், புயல்களை குண்டுவீசி கலைப்பது சாத்தியமா? டிரம்ப் கேள்வி


பெரும் சேதத்தை ஏற்படுத்தும் சூறாவளிகள், புயல்களை குண்டுவீசி கலைப்பது சாத்தியமா? டிரம்ப் கேள்வி
x
தினத்தந்தி 26 Aug 2019 3:47 PM GMT (Updated: 26 Aug 2019 3:47 PM GMT)

பெரும் சேதத்தை ஏற்படுத்தும் சூறாவளிகள், அமெரிக்காவில் கரையை கடப்பதற்கு முன்னர் அணுகுண்டு வீசி கலைக்க முடியுமா? என அதிகாரிகளிடம் அதிபர் டிரம்ப் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையோரம் சூறாவளி தாக்குதல்களுக்கு உள்ளாகும் பகுதியாக இருக்கிறது. சூறாவளிகள் கரையை கடக்கும்போது உயிர்ச்சேதங்களும், பெரும் பொருட்சேதங்களும் ஏற்படுகின்றன. அமெரிக்காவில் கடந்த 2017ஆம் ஆண்டில் கரையை கடந்த ஹார்வி புயல் பெரும் பொருட்சேதத்தை விளைவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிரிக்க கடலோர பகுதியில் உருவாகும் சூறாவளிகள், அட்லாண்டிக் கடல் மீது நகர்ந்து வரும்போது, புயலின் கண் என குறிப்பிடப்படும் மையப்பகுதியில் குண்டுவீசுவதன் மூலம் அதை கலைத்துவிட முடியுமா? என அதிகாரிகளிடம் டிரம்ப் பல சந்தர்ப்பங்களில் கேட்டதாக சொல்லப்படுகிறது. இது குறித்து வெள்ளை மாளிகை கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டது.

ஆனால் டிரம்ப் கூறியது மோசமான யோசனை அல்ல என வெள்ளை மாளிகை மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரம்பின் கருத்து புதியது அல்ல என்றும், 1950களில் எய்சன்ஹோவர் அதிபராக இருந்தபோது, அரசாங்க விஞ்ஞானிகளே இப்படிப்பட்ட கருத்தை பரிந்துரைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனால் புயல்களை குண்டுவீசி கலைப்பது சாத்தியமில்லை என பின்னர் விஞ்ஞானிகளே தெரிவித்துள்ளனர். இருப்பினும் இத்தகைய கருத்துகள் அவ்வப்போது பேசப்படும் நிலையில், புயல்களை குண்டுவீசி கலைப்பது சாத்தியமா என அதிபர் டிரம்ப் கேட்டதாக தகவல் வெளியானது விவாதத்தை கிளப்பியுள்ளது.

Next Story