சோதனை கருவிகள் குறித்து புகார்; இந்தியாவுடன் விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் - சீன நிறுவனங்கள் அறிவிப்பு


சோதனை கருவிகள் குறித்து புகார்; இந்தியாவுடன் விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் - சீன நிறுவனங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 25 April 2020 11:46 PM GMT (Updated: 25 April 2020 11:46 PM GMT)

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட துரித சோதனை கருவிகள் துல்லியமாக இல்லை என்ற புகார் இங்கு எழுந்துள்ளது. இது குறித்த விசாரணையில் இந்தியாவுடன் ஒத்துழைக்க தயார் என அவற்றை ஏற்றுமதி செய்த சீன நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

புதுடெல்லி, 

வளர்ந்த உலக நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடுகையில் இங்கு கொரோனா வைரஸ் தாக்கத்தின் அளவு குறைவாகவே இருக்கிறது. அதே நேரத்தில் இங்கு பரிசோதனை வசதிகளும் குறைவாகவே இருக்கின்றன. இதனால் அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு பரிசோதனை நடத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.

அந்த வகையில் விரைவான முதல் கட்ட சோதனைக்கு உதவுகிற ரேபிட் டெஸ்ட் கிட் என்று அழைக்கப்படுகிற 5½ லட்சம் துரித சோதனை கருவிகளை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது.

சீனாவின் குவாங்சோ வோண்ட்போ பயோடெக் நிறுவனம் 3 லட்சம் கருவிகளையும், லிவ்சான் டயாக்னஸ்டிக்ஸ் நிறுவனம் 2½ லட்சம் கருவிகளையும் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்தன.

ஆனால் இந்தக் கருவிகள் துல்லியமாக செயல்படவில்லை, அவை முழுமையாக செயல்படவும் இல்லை என பரவலாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து துரித சோதனை கருவிகளை பயன்படுத்துவதை நிறுத்தி வைக்குமாறு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஐ.சி.எம்.ஆர். கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில்தான் தாங்கள் வினியோகம் செய்த துரித சோதனை கருவிகளின் தரம் தொடர்பாக இந்திய விசாரணை அமைப்புகளுடன் ஒத்துழைக்க தயார் என சீன நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

குவாங்சோ வோண்ட்போ பயோடெக் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு துரித சோதனை கருவிகளை நாங்கள் ஏற்றுமதி செய்துள்ளோம். எங்கள் தயாரிப்பை புனே தேசிய வைராலஜி இன்ஸ்டிடியூட் மூலம் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மதிப்பிட்டு ஏற்றுக்கொண்டது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியில், எங்கள் நிறுவனம் ஒவ்வொரு நாட்டின் தொடர்புடைய சுகாதார அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்கிறது. இநதியாவுடனும் ஒத்துழைக்க தயார். எங்கள் தயாரிப்புகளின் உணர்திறன் மற்றும் தனித்தன்மை பற்றி பல்வேறு சரிபார்ப்புகளை நாடுகள் மேற்கொள்கின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு நிறுவனமான லிவ்சான் டயாக்னஸ்டிக்ஸ் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எங்கள் துரித சோதனை கருவிகளின் முடிவுகள் துல்லியமாக இல்லை என்று இந்தியாவில் இருந்து வந்துள்ள புகார்களைக் கண்டு அதிர்ச்சி அடைகிறோம். இதில் நாங்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளோம். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையின் விசாரணைக்கு நாங்கள் ஒத்துழைக்க விருப்பம் கொண்டுள்ளோம். எங்கள் கருவிகளைப் பொறுத்தமட்டில் அவற்றை 2 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியசுக்குள் வெப்ப நிலை உள்ள இடத்தில் வைக்க வேண்டும். அவை உறையக்கூடாது. கருவிகளை வைக்கிற அறையின் வெப்ப நிலை மிக அதிகளவில் இருந்தால், அது பரிசோதனையின் துல்லியத்தில் பாதிப்பை உண்டாக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கைகளை டெல்லியில் உள்ள சீன தூதரகம் நேற்று வெளியிட்டுள்ளது.

Next Story