பாகிஸ்தானில் பயங்கரம்: 100 பேருடன் பறந்த விமானம் விபத்தில் சிக்கியது


பாகிஸ்தானில் பயங்கரம்: 100 பேருடன் பறந்த விமானம் விபத்தில் சிக்கியது
x
தினத்தந்தி 23 May 2020 12:30 AM GMT (Updated: 23 May 2020 12:30 AM GMT)

பாகிஸ்தானில் 100 பேருடன் பறந்த விமானம் விபத்துக்குள்ளானது. குடியிருப்பு பகுதியில் விழுந்ததால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானில் கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. சமீபத்தில்தான் உள்நாட்டு விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்சுக்கு சொந்தமான ஏ320-ஏர்பஸ் ரக விமானம், பாகிஸ்தானில் லாகூரில் இருந்து கராச்சிக்கு புறப்பட்டது. அதில், 90 பயணிகளும், 10 சிப்பந்திகளுமாக மொத்தம் 100 பேர் இருந்தனர்.

கராச்சியில் உள்ள ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க முயன்றபோது, என்ஜின் கோளாறு ஏற்பட்டது. அதனால் தரை இறங்க முடியவில்லை. அதனால், விமான நிலையத்துக்கு மேலே விமானம் வட்டமடித்துக் கொண்டிருந்தது.

இரண்டு, மூன்று தடவை முயற்சித்தும் தரை இறங்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து, எதிர்பாராமல், விமான நிலையத்துக்கு அருகே உள்ள மாடல் காலனி என்ற குடியிருப்பு பகுதியில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 45 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

45 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் சுகாதாரத்துறை மந்திரி அஸ்ரா பெச்சுகோ தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “45 உடல்களும், காயமடைந்த பலர் கராச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஏற்கனவே கொரோனா காரணமாக அவசரநிலை நிலவுவதால், டாக்டர்களை உஷார்படுத்தி உள்ளோம். அறுவை சிகிச்சை பிரிவுகளையும் உஷார்படுத்தி உள்ளோம்” என்றார்.

24 நியூஸ் என்ற தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப்பிரிவு இயக்குனர் அன்சார் நக்வி, பஞ்சாப் வங்கி தலைவர் சபர் மசூத் ஆகியோரும் அந்த விமானத்தில் பயணம் செய்தவர்களில் அடங்குவர். நல்லவேளையாக, சபர் மசூத் உயிர் பிழைத்து விட்டதாக அவருடைய குடும்பத்தினர் தெரிவித்தனர்.

குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்ததால், அங்கு வசிப்பவர்களில் சுமார் 30 பேர்வரை காயமடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப்பணிகள் முழுமையாக முடிவடையும்போது, சாவு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று சிந்து மாகாண கவர்னர் இம்ரான் இஸ்மாயில் தெரிவித்தார். முடிந்த அளவுக்கு அதிகமானோரை காப்பாற்ற முயற்சித்து வருவதாகவும் அவர் கூறினார். விபத்துக்குள்ளான விமானத்தின் விமானி, விமான கட்டுப்பாட்டு கோபுரத்துடன் கடைசியாக பேசிய உரையாடல் அடங்கிய பதிவு வெளியாகி உள்ளது.

அதில், என்ஜின் கோளாறு ஆகிவிட்டதாகவும், தரை இறங்க முடியாமல், வானில் வட்டமடித்து வருவதாகவும் அவர் பேசியது இடம்பெற்றுள்ளது.

இந்த விமான விபத்து குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், “பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் தலைமை செயல் அதிகாரி அர்ஷத் மாலிக்கை தொடர்பு கொண்டேன். அவர் கராச்சிக்கு விரைந்துள்ளார். மீட்பு, நிவாரண படையினர் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். உடனடி விசாரணை நடத்தப்படும்” என்றார்.

Next Story